டாஸ்மாக் முன்பாக விலைப்பட்டியல்.. கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை..செந்தில் பாலாஜி வார்னிங்
சென்னை: டாஸ்மாக், மதுக்கூடங்கள் திறப்பில் எந்த வித விதி மீறல்களும் இருக்கக் கூடாது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மது வகைகளை விற்கக் கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சொல்லியிருந்தார்.

ஆனாலும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கே மதுபானங்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் பலரும் கூறி வருவதைக் காண முடிகிறது. மாநில வாணிப கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது பல்வேறு அறிவுறுத்தல்களை அவர் விடுத்தார். அதன் விவரம் வருமாறு:-
டாஸ்மாக் , மதுக்கூடங்கள் திறப்பில் எந்த வித விதி மீறல்களும் இருக்கக் கூடாது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுவகைகளை விற்கக் கூடாது. டாஸ்மாக் மதுக்கூடங்கள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிகு மூடப்பட வேண்டும். கள்ளச்சாராயம், போலி மது விற்கப்படுவதை கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டும். கூடுதல் விலைக்கு மதுவை விற்றால் அபராதத்தை வசூலிக்க வேண்டும். சட்ட விரோத மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மதுபானங்களின் விலை பட்டியலை டாஸ்மாக் கடையின் முன் வைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் கூடுதல் நேரம் திறந்து இருக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
சட்ட விரோத மதுக்கூடங்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் எஸ்.பி மூலம் நடவடிட்க்கை எடுக்க வேண்டும். ஏதேனும் விதி மீறல்கள் இருந்தால் அதற்குரிய அபராதம் வசூலிக்க வேண்டும். பணியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விதிமுறைகளையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்" என்றார். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் அமுதா, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் ஐ.ஏ.எஸ் உள்ளிடோரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications