ஆவின் ஆரஞ்ச் நிற பால் விலை உயர்வு..லிட்டருக்கு எவ்வளவு அதிகரிப்பு.. முழு விபரம்!
சென்னை: ஆவின் பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் அரசு உயர்த்தியுள்ளது. கொழுப்பு நிறைந்த ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் அரை லிட்டர் 24 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக விற்பனையாகிறது. அதே போல ஒரு லிட்டர் ஆவின் பால் பாக்கெட் 60 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே நேரம் அட்டைதாரர்களுக்கு விலை உயர்வு இன்றி லிட்டர் 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் ஆவின் பால் சில்லறை விற்பனை விலையை இன்று முதல் உயர்த்தியுள்ளது.
இந்நிலையில், அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், "ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.

ஆவின் பால் கொள்முதல்
ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 இலட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. கடந்த 19.08.2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.41-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், நுகர்வோர்களின் நலன் கருதி, கடந்த 16.5.2021 முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3ரூபாய் குறைக்கப்பட்டது.

கொள்முதல் விலை உயர்வு
பால்கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமாகும். இச்சூழ்நிலையில் இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவை கூடியுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பால்கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர்.

லிட்டருக்கு ரூ.3 உயர்வு
அதன்படி, பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி, ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி. ரூ.41லிருந்து ரூ.44 ஆகவும் வழங்கப்படும். நாளை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். இந்த கொள்முதல் விலை உயர்வால், சுமார் 4.20 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் விலை உயர்வு
பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட அதே நேரத்தில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் அரசு உயர்த்தியுள்ளது. கொழுப்பு நிறைந்த ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் அரை லிட்டர் 24 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக விற்பனையாகிறது. அதே போல ஒரு லிட்டர் ஆவின் பால் பாக்கெட் 60 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே நேரம் அட்டைதாரர்களுக்கு விலை உயர்வு இன்றி லிட்டர் 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் விலை உயர்வு ஏன்
ஆவின் பால் விலை உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த 03.11.2022 நாளிட்ட செய்தி குறிப்பினை தொடர்ந்து 05.11.2022 முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32 லிருந்து ரூபாய் 35 ஆகவும் எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41 லிருந்து 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இருப்பினும் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோரின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் நீல நிறம் பால் பாக்கெட் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிறம் பால் பாக்கெட் ஆகியவற்றின் விலையில் மாற்றம் இன்றி தற்போதைய நிலையே தொடரும்.

சனிக்கிழமை முதல் விலை உயர்வு
தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலை மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கு புதுபிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60ஆக 05.11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த விலை மாற்றம் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடு செய்யும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்கள் நலன்
இந்த விலை மாற்றத்திற்கு பின்னரும் ஆவின் நிறைகிழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ 24 குறைவு. சில்லறை விலையில் விற்க்கப்படும் நிறைகொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ 10 குறைவு. உற்பத்தியாளர்காளின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும் சில்லறை விற்பனையாளர்களும் மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications