நீங்கள் டெல்லிக்கு வர வேண்டும்... ராமதாசுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த பிரதமர் மோடி..!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் 83-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவர்களை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ராமதாஸை தொலைபேசி மூலம் அழைத்து தனது வாழ்த்தை பகிர்ந்து கொண்டார்.
மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்
இது தொடர்பாக பாமக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
டெல்லிக்கு வாங்க
''பாமகவின் நிறுவனர் ராமதாஸின் 83-வது பிறந்தநாளையொட்டி, இன்று காலை அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். ராமதாஸின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், டெல்லிக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.''
தொலைபேசி மூலம்
''மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று காலை ராமதாஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 83-வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட ராமதாஸ், 'உங்கள் தந்தை கருணாநிதி என்னுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்'.
மக்கள் நலன்
''ராமதாஸை விட்டால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராட வேறு யாரும் இல்லை என்று அனைவரிடமும் கூறுவார்.பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார். உங்கள் தந்தையின் அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும்" என்று வாழ்த்தினார். அதற்காக ராமதாஸுக்கு முதல்வர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.''
ராமதாஸ் நன்றி
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ராமதாஸ் நன்றி தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது, இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மருத்துவர் அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் எனக் கூறியிருக்கிறார்.