கஜாவை விட வெரி ஃபாஸ்ட்.. உத்தரவு வந்த ஒரு மணி நேரத்தில் விடுவிக்கப்பட்ட அதிமுகவினர்
Recommended Video
சென்னை: தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 3 அதிமுகவினரையும் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அவர்கள் மூவரும் சிறையை விட்டு வெளியே வந்தனர்.
கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அப்போது தருமபுரி அருகே கோவை அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் வந்த பேருந்தை அதிமுகவினர் சிலர் தீவைத்து எரித்தனர். இதில் பேருந்துக்குள் இருந்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்ற, மூன்று மாணவியர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தூக்கு
இந்த வழக்கில் தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன், தர்மபுரி நகர முன்னாள் செயலாளர் நெடுஞ்செழியன், எம்ஜிஆர் மன்ற நிர்வாகி மாது (எ) ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கடிதம்
3பேரும் மேல் முறையீடு செய்ததை அடுத்து தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சுமார் 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர்களை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.
மூவரும் விடுவிப்பு
இதில் முதலில் நிராகரிக்கப்பட்டு இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட கடிதத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
வெளியே வந்த மூவர்
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு சிறைத்துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில் பஸ் எரிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் விடுதலை செய்யுமாறு காலை 11.30 மணிக்கு சிறைத் துறைக்கு பேக்ஸ் கிடைக்கப் பெற்றது. சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்திலிருந்து பேக்ஸ் வந்ததை அடுத்து ஒரு மணி நேரத்தில் அதாவது 12.25 மணிக்கு மூவரும் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.