தேர்தல் நேரத்திலும் கட்டணக்கொள்ளை நடத்தும் ஆம்னி பஸ்கள்.. டிக்கெட் பல மடங்கு உயர்வு.. பயணிகள் ஷாக்
சென்னை: தமிழகத்தில் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாளை மறுநாள் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர் செல்ல திட்டமிட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.3 ஆயிரம் வரை ஆம்னி பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. 23 ஆம் தேதி நடைபெறும் இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட பல்வேறு முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2 மடங்கு உயர்வு
சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் பலருக்கு சொந்த ஊர்களில் வாக்குகள் இருப்பதால், சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், ரயில், பேருந்துகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் புக்கிங் ஆகிவிட்டன. இதனால் சிறப்பு பேருந்துகளும் ரயில்களும் அறிவிக்கப்பட்டன. சிறப்பு ரயில்களில் புக்கிங் ஓபன் ஆன மறுநொடியே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.
இதனால், சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் தனியார் ஆம்னி பஸ்களில் செல்லலாம் என நினைத்து டிக்கெட் புக் செய்ய சென்றால், டிக்கெட் கட்டணம் பயணிகளை தலைசுற்ற வைத்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணங்களை விட 2 மடங்கு மூன்று மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பயணிகள் அதிர்ச்சி
சென்னையில் இருந்து நெல்லைக்கு படுக்கை வசதி கொண்ட சாதாரண பேருந்தில் ரூ.1,400 என இருந்த கட்டணம், தற்போது ரூ.3,000- ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, மதுரைக்கும் ரூ. 2 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'ரெட் பஸ்' போன்ற டிக்கெட் புக்கிங் செயலிகளில் வெளிப்படையாகவே இந்த கட்டணத்தை வைத்து ஆம்னி பஸ் நிறுவனங்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்து இருப்பதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களுக்கு வசூலித்தது போல தேர்தல் நேரத்திலும் ஆம்னி பஸ்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியிருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் தலையிட்டு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications