அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு
சென்னை: கல்விக் கட்டணங்களை பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமனத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு நிர்ணயித்த கல்வி கட்டண விபரங்களை பள்ளி விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு மாநில தகவல் ஆணையம் மே 25 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

சட்ட வரம்பு அதன்படி ஜூன் 5 ஆம் தேதிக்குள் கட்டண விபரங்களை விளம்பரப் பலகையில் வெளியிடும்படி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகள் துறை இயக்குநர் ஜூன் 1 ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டார்.
தகவல் அறியும் உரிமை சட்டம், தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா என்பது ஆராயப்படவில்லை.
தகவல் அறியும் சட்டத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது, ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிலைக்கத்தக்கதல்ல.
வெளிப்படையான சட்டப்பூர்வ விதிமுறை இல்லாத நிலையில், தனியார் சுயநிதி பள்ளிகளின் கட்டண கட்டமைப்பை வெளியிடுமாறு கட்டாயப்படுத்த, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை.
விசாரணை மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., வாரிய அங்கீகாரம் பெற்ற பள்ளிகள், மாநில பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டவையா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
முன் அறிவிப்போ, விசாரணையோ இல்லாமல், நான்கு நாட்களுக்குள் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பது இயற்கை நீதிக்கு முரணானது.
மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு அதிகார வரம்பு மீறல் என்பதால், அந்த உத்தரவையும், அதன் அடிப்படையில் தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த சுற்றறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications