என் அம்மாவை அவமானப்படுத்தினாங்க! பாஜகவை விட்டு விளாசிய பிரியங்கா.. காங். போராட்டத்தில் பாய்ச்சல்!
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக நாடு முழுக்க போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் பாஜக அரசை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
கர்நாடகாவில் 2019 தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி மோடி என்ற பெயரை பயன்படுத்தி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். இனி அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டதாகவும், வயநாடு தொகுதி காலி ஆகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

போராட்டம்
இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக நாடு முழுக்க போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டெல்லியில் காந்தி நினைவிடம் இருக்கும் ராஜ்காட் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர். இதையடுத்து அங்கே போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 144 தடை உத்தரவும் போடப்பட்டு உள்ளது.

பிரியங்கா காந்தி
இந்த நிகழ்வில் பேசிய பிரியங்கா காந்தி பாஜக அரசு மீது கடுமையான புகார்களை வைத்தார். அதில், என்னுடைய அப்பாவை பாராளுமன்றத்தில் அவமானப்படுத்தி இருக்கிறார்கள். என் சகோதரனை மிக மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். உங்களுடைய அமைச்சர்கள் என்னுடைய தாயை மிக கடுமையான பாராளுமன்றத்தில் அவமானப்படுத்தி இருக்கிறார்கள். உங்களுடைய முதலமைச்சர் ஒருவரே ராகுல் காந்திக்கு அவரின் அப்பா யார் என்று தெரியாது என்று கூறினார். அவ்வளவு மோசமாக பேசி இருக்கிறார்கள்.

மோசமான பேச்சு
ஆனால் இவர்கள் மீதெல்லாம் எந்த விதமான ஆக்சனும் எடுக்கப்பட்டு இல்லை. இவர்கள் மீதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோர்ட் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதில்லை, சிறைக்கு அனுப்பப்படுவதில்லை, வருடக்கணக்கில் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்துவதும் இல்லை. அவர்கள் என் குடும்பத்தை பலமுறை அவமதித்துள்ளனர், ஆனால் நாங்கள் அமைதியாக இருந்தோம். நாங்கள் குடும்ப ஆட்சி, குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள். நான் ஒன்று கேட்கிறேன்,.. ராமர் யார்? அவரும் குடும்ப ரீதியாக வந்தவர் தானே?

ஜனநாயகம்
பாண்டவர்கள் யார்? அவர்களும் குடும்பத்தினர் தானே? அவர்களும் அவர்களின் குடும்பத்திற்காக போராடினார்கள் தானே? எங்கள் குடும்பத்தினர் இந்த நாட்டிற்காக போராடினார்கள் என்பதற்காக நாங்கள் கவலைப்பட முடியுமா ? வருந்த முடியுமா? நாங்கள் பெருமைதான் கொள்ள முடியும். எங்கள் குடும்பம் இந்த நாட்டில் ஜனநாயகத்தை புகுத்துவதற்காக தங்கள் ரத்தத்தை சிந்தி இருக்கிறார்கள். என் சகோதரன் பிரதமர் மோடியை பாராளுமன்றத்தில் கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தினார். எனக்கும் பிரதமர் மீது வெறுப்பு எதுவும் இல்லை. நமக்குள் கொள்கைகள் வேறாக இருக்கலாம். ஆனால் அதற்காக நாம் வெறுப்பை பரப்ப கூடாது, என்று பிரியங்கா காந்தி பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications