தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
சென்னை: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் வீட்டு பணிப்பெண், அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞானவேல்ராஜா , சூர்யா, கார்த்தியின் படங்களை தயாரித்து வந்தார். அவர் ஸ்டூடியோ கிரீன், ஆத்னா ஆர்ட்ஸ் என்ற இரு ஸ்டூடியோக்களை வைத்துள்ளார். இவருக்கு மனைவி நேகா.

ஞானவேல்ராஜா, நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு தூரத்து உறவினர். இந்த நிலையில் சில்லுனு ஒரு காதல், பருத்திவீரன், சிங்கம், நான் மகான் அல்ல, அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இவரது வீட்டில் கடந்த 14 ஆம் தேதி நகைகளை காணவில்லை நேகா, மாம்பலம் போலீஸில் புகார் அளித்தார். அதில் தனக்கு பணிப்பெண் லட்சுமி மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் இருந்தார். இதையடுத்து பணிப்பெண் லட்சுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது "நான் நகைகளை திருடவில்லை" என லட்சுமி கூறினாராம். இருந்தும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் எழுதி வாங்கிக் கொண்டு லட்சுமியை அனுப்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் திருட்டு சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்தது குறித்து மனஉளைச்சலில் இருந்தாராம் லட்சுமி.
அப்போது அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினர், லட்சுமியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனது தாயை விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்ததாகவும் அதனால்தான் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஞானவேல்ராஜா மனைவி நேகா மீது லட்சுமியின் மகள் புகார் அளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் ஈஸ்வரி, தங்கம், வைரம், பவளம் உள்ளிட்ட நகைகளை திருடி பிளாட் வாங்கியதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அது போல் பாடகர் விஜய் ஜேசுதாஸ் வீட்டிலும் பணியாளர் ஒருவர் நகைகளை திருடியதாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் அவருடைய மனைவி புகார் அளித்திருந்தார். ஆனால் அந்த விசாரணைக்கு விஜய் ஜேசுதாஸ் ஆஜராகவில்லை என கூறப்பட்டது.
அது போல் நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு நடந்திருந்த போதிலும் அந்த பணிப்பெண் மீது அவர் போலீஸில் புகார் ஏதும் கொடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications