"கருப்பு ஆடுகள்".. யார் அந்த மாஜிக்கள்.. 151 மசாஜ் சென்டர்களில் அதிரடி ரெய்டு.. சிக்கியவர்கள் யார்?
மசாஜ் சென்டர்களில் சென்னை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர்
சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனையை நடத்தி உள்ளனர்.. கிட்டத்தட்ட 151 மசாஜ் சென்டர்களில் போலீசார் ரெய்டு நடத்தியது பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது... இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
இதையடுத்து, அனுமதியின்றி நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பா குறித்து அறிக்கை அளிக்கும்படி உளவுத்துறைக்கு, கமிஷனர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது...
மசாஜ் சென்டர், பியூட்டி பார்லர்களில் இனிமேல் இப்படித்தானாம்..
அறிக்கை
அதன்படி, முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள், ஸ்பாக்கள், மற்றும் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் குறித்தும் புள்ளிவிவரங்களுடன் கூடிய அறிக்கையை போலீசார் அளித்தனர்.. அந்த அறிக்கையில், அனுமதியின்றி அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்படை
இதையடுத்துதான், மாநகர காவல் எல்லையில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்த துணை கமிஷனர் தலைமையில் 12 தனிப்படையின் கீழ் 150 குழுவை அமைத்து கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்... அந்த உத்தரவுப்படி அண்ணாநகர், விருகம்பாக்கம், கேகே நகர், தி.நகர், அடையார், திருவான்மியூர், கிண்டி உட்பட சென்னை முழுவதும் தனிப்படையினர் 151க்கும் மேற்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் நேற்று நள்ளிரவு வரை சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
பாலியல் தொழில்
அப்போது, பல மசாஜ் சென்டர்களில் லைசன்ஸ் புதுப்பிக்கப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது.. அதுமட்டுமல்ல, ஒரே இடத்தில் வாங்கிய சர்ட்டிபிகேட்டுகளை வைத்து கொண்டு, நிறைய இடங்களில் மசாஜ் சென்டர்களை நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.. மேலும் அந்த மசாஜ், ஸ்பா சென்டர்களில் ஏராளமான இளம்பெண்களும் இருந்துள்ளனர்.. அவர்களில் பெரும்பாலும் வடமாநில இளம் பெண்களே அதிகமாம்.. கஸ்டமர்களிடம் நாசூக்காக பேசி, ரகசியமாக இவர்கள் பாலியல் தொழில் செய்து வந்துள்ளதும் விசாரணையில் உறுதியானது..
அதிரடி சோதனை
இதையடுத்து, பாலியல் தொழில் நடந்த மசாஜ் சென்டர் ஓனர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த இளம் பெண்களையும் மீட்டனர்... இதில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது.. இந்த சோதனையில் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர் நடத்தியதில் சில "மாஜிக்களும்" அடங்குவார்களாம்.. இவர்களுக்கு இந்த ஸ்பா & மசாஜ் சென்டர்களுடன் நேரடி தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு சில கருப்பு ஆடுகள் மறைமுகமாக உதவியாக இருந்துள்ளதாக தெரிகிறது. அதிரடி சோதனை தொடர்பான விசாரணைகள் மேலும் விரிவடைந்து வருகிறது.
தேஜல் கொலை
இப்படித்தான் கடந்த மாதம் சேலத்தில், நிர்வாண கோலத்தில் தேஜல் என்ற இளம்பெண்ணை கொலை செய்து, சூட்கேஸில் சடலத்தை அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அந்த பெண்ணும் இப்படி பியூட்டி பார்லர், ஸ்பா, மசாஜ் சென்டர்களை வைத்து நடத்தியவர்தான்.. பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பான தொழில் ரீதியாக ஏற்பட்ட பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
புள்ளிகள்
இதனிடையே, கொலை செய்யப்பட்ட தேஜலுடன் தொடர்பில் இருந்ததோடு, அவரது சட்டவிரோத செயலுக்கு துணை போனதாக அஸ்தம்பட்டியில் அப்போது பணியில் இருந்த எஸ்ஐ ஆனந்தகுமார், எஸ்எஸ்ஐ சேகர், கலைச்செல்வன் மற்றும் ஏட்டு மணிகண்டன் ஆகிய 4 பேரையும் சேலம் மாநகர கமிஷனர் நஜ்முல்கோடா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தார்... இப்போது சென்னை போலீசாரும், தன்னுடைய அதிரடிகளை துவக்கி உள்ளது, சில "புள்ளிகளுக்கு" கலக்கத்தை தந்து வருகிறதாம்..!