"விபச்சாரம்".. மசாஜ் சென்டர்களில் அபலைகள்.. வேடிக்கை பார்க்க முடியாது.. கோர்ட்டில் கொந்தளித்த போலீஸ்
மசாஜ் நிலையங்களில் விபச்சாரம் நடப்பதாக வந்த புகார் குறித்த விசாரணை இன்று நடந்தது
சென்னை: மசாஜ் நிலையங்களில் விபச்சாரம் நடப்பதாக புகார் வந்தால் சோதனை நடத்த உள்ளூர் போலீசாருக்கும் அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.. அதேசமயம், மசாஜ் நிலையங்களில் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என காவல்துறை தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் உள்ள வில்லோ ஸ்பா என்ற மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்தன.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மசாஜ் நிலைய உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உட்பட 4 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

மசாஜ் சென்டர்
இந்த நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மசாஜ் நிலைய உரிமையாளர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இறுதி விசாரணை
ஜனவரி 2021ல் வழங்கிய இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது... இந்த வழக்கின் இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு இன்று நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதிட்டதாவது:

மசாஜ் நிலையங்கள்
"சுதந்திரமாக தொழில் நடத்தும் உரிமையில் காவல்துறை தலையிட முடியாது.. சோதனையின்போது காவல்துறை உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை.. ஏற்கனவே மசாஜ் நிலையங்களில் சோதனை நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை.. விபச்சார தடுப்பு சிறப்பு அதிகாரிக்குதான் சோதனை நடத்த உரிமை உள்ளது" என்று வாதிடப்பட்டது.

சுப்ரீம்கோர்ட்
இதையடுத்து, காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதிடும்போது, "ஏற்கனவே சோதனைகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகளின்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக எடுத்துரைக்கப்படவில்லை.. சோதனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பதற்காக வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள்
காவல் துறை விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அதனால் குற்றவாளி எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கீழ் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி தான் முடிவு செய்ய முடியும் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் கடந்த 1987ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளும் சோதனை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளது என்றும் விளக்கமளித்தார்.

மசாஜ் சென்டர்கள்
நியாயமாய் தொழில் நடத்தும் உரிமையில் காவல் துறை தலையிடாது, ஆனால் தவறு நடக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது, உரிய நடவடிக்கை எடுத்து அப்பாவி அபலை பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என பல உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளில் சொல்லப்பட்டுள்ளது" என்று வாதாடினார். இதனையடுத்து, இந்த காவல்துறையினரின் விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குக்கான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications