நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கலை? - ஹைகோர்ட் கண்டனம்
சென்னை: நீர் ஆதாரங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏன் அமைக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக நான்கு வார காலத்திற்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் சின்னமானசாவடியில் உள்ள ஒரு ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும் இதை மீட்க கோரி கடந்த ஜூன் மாதம் தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவே ஓடை புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தர்மபுரியை சேர்ந்த கலையரசி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

இந்த மனு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகம் முழுவதும் ஓடை புறம்போக்கு நிலங்கள் அதிகளவில் ஆக்கிரமிப்பு நடப்பதாக நாளிதழ்களில் தினமும் செய்து வருகிறது, இந்த ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது ஏன் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டனர்.
நீர் ஆதாரங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏன் அமைக்கக்கூடாது என்று கேட்ட நீதிபதிகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றம் பல உத்தரவு பிறப்பித்தும் ஏன் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினர். நீதிபதி நிலத்தடி நீர் அதிகளவில் சுரண்டல் நடப்பதற்கு கண்டனமும் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் உள்துறை செயலாளர் பொதுப்பணித்துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரை தாமாக முன்வந்து சேர்த்தும் ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக நான்கு வார காலத்திற்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications