போராட்டங்களை அறவழியில் நடத்தலாம்.. வன்முறை இருந்தால் கடும் நடவடிக்கை.. வடக்கு மண்டல ஐஜி எச்சரிக்கை
சென்னை: போராட்டங்களை அறவழியில் நடத்தலாம் என்றும் வன்முறை ஏற்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். என்.எல்.சிக்கு எதிராக பாமக நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், இவ்வாறு ஐஜி கண்ணன் கூறினார்.
என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து பாமகவினர் நேற்று நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி வன்முறையாளர்களை கலைத்தனர். இந்த சம்பவங்களால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வடக்கு மண்டல ஐஜி கண்ணன், "அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். ஆனால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார். வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தனது பேட்டியில் கூறியதாவது:- கடந்த 2 நாட்களாக என்.எல்.சியில் பரவனாறு கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு பாதுகாப்பு கொடுத்து இருந்தோம். என்.எல்.சிக்கு எதிராக சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. பாமக தலைவர் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி முற்றுகை போராட்டத்தின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவை தொடர்ந்து பாமக தலைவரும் வேறு சிலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
அப்போது கல்வீச்சு நடைபெற்றது. கல்வீச்சை கட்டுப்படுத்துவதற்காகவும் பாமக தலைவரை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்காகவும் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்த வேண்டியிருந்தது. அப்படி தடியடிநடத்தும் போது காவல்துறையின் வாகனங்கள் மூன்று சேதம் அடைந்தன. அதேபோல், 6 அதிகாரிகள் 14 காவலர்கள் என மொத்தம் காவல்துறையில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை டிஜிபி பார்த்து நலம் விசாரித்தார்.
போலீசார் இந்த விவகாரத்தை மிகுந்த முதிர்ச்சி தன்மையுடனும் பொறுமையுடனும் கையாண்டார்கள். அதனால் போராட்டக்காரர்கள் என்.எல்.சிக்குள் நுழைந்து சேதப்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் போலீசார் பொறுமையாக நடந்து கொண்டதால் பெரிய அளவில் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. அதேபோல கிட்டதட்ட 400 க்கும் மேற்பட்டவர்கள் முன்னேற்பாடாக கைது செய்யப்பட்டார்கள்.
இதை எதிர்த்து பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் 800-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி வருகிறோம். முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டவர்கள் மாலை 6 மணியளவில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த மாதிரியான சூழலில் மேற்கொண்டு எந்த சூழலும் நடக்காமல் இருக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். போராட்டங்களை அறவழியில் நடத்தாலாம். வன்முறை இருக்கக் கூடாது. வன்முறை இருந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications