முட்டாள்கள்.. வெறியர்கள்.. "இவங்க" விசித்திர ஜந்துக்கள்! சீறிய செந்தில்.. பிடிஆருக்கும் வந்ததே கோபம்
சென்னை: மத மோதல் ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் குறித்து தவறான செய்தியை பரப்பிய நபருக்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மின்சார கட்டணம் தொடர்பான வாட்ஸ் ஆப் வதந்தி ஒன்று பரவி வருகிறது. தமிழ்நாட்டில் மசூதிகள், சர்ச்சுகளில் மின் கட்டணம் குறைவு என்றும், கோவில்களுக்கு மின் கட்டணம் அதிகம் என்று அந்த வாட்ஸ் ஆப் வதந்தியில் பல்வேறு பொய்யான தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

தீயாக பரவும் வதந்தி
இந்த செய்தி இப்போது என்று இல்லை.. கடந்த ஒரு வருடமாகவே இணையத்தில் தீவிரமாக பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு மின்சாரத்துறை சார்பாக பல முறை விளக்கமும் அளிக்கப்பட்டுவிட்டது. கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் என்று அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று மின்சாரத்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதையும் மீறி இதே வதந்தியை பலர் பரப்பி வருகிறார்கள்.

பொய்யான செய்தி
இந்த நிலையில்தான் மனோஜ் பை என்ற நபர் இணையத்தில் இதே வதந்தியை மீண்டும் பரப்பினார். பிரபல ஐடி நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் அவர் இந்த பொய்யான போஸ்டை பரப்பிய நிலையில் அதை பலரும் உண்மை என்று நம்பி பகிர்ந்தனர். அவர் அந்த போஸ்டில், நண்பர்களே இது உண்மையா? தமிழ்நாட்டில் இந்து கோவில்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறதா?

பாகுபாடா?
இது உண்மையாக இருந்தால், அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் சமத்துவ உத்தரவாதத்திற்கு எதிரானது அது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். அதோடு வடஇந்திய செய்தியாளர்களையும் அந்த போஸ்டில் அவர் டேக் செய்து இருந்தார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதை பகிர்ந்து, டியர் சார்.. பொது தளத்தில் பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம். கோவில்கள், மசூதிகள், சர்ச்சைகள் எல்லாம் பொது வழிபாட்டு தலங்கள் என்ற பிரிவின் கீழ் வருகின்றன.

செந்தில் பாலாஜி கோபம்
இதற்கு குறைந்த பட்ச மின் கட்டணம் Rs. 5.75 / யூனிட் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் 120 யூனிட்களுக்கு 2.90 ரூபாய் யூனிட் வீதம் அரசு கட்டண விலக்கு அளித்துள்ளது. எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் ஒரே கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. இதில் வேறுபாடு காட்டப்படவில்லை. அதிலும் 8 ரூபாய் வசூலிக்கப்படுவதாக நீங்கள் கூறியதில் உண்மை இல்லை. புரிந்து கொண்டதற்கு நன்றி என்று செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

பிடிஆர் விளக்கம்
அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தும் அந்த நபர் அந்த வதந்தி போஸ்டை நீக்கவில்லை. இந்த நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதை விமர்சித்துள்ளார். அதில், சிலர் மத வெறியர்களாக இருப்பார்கள். சிலர் முட்டாள்களாக இருப்பார்கள். ஆனால் சிலர் ஜந்துக்கள் இரண்டின் கலவையாக இருப்பார்கள்.
1) 3 வருடங்களுக்கு முன் பொய் என்று கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொய்யான செய்தியை இவர் வெளியிடுகிறார், அவரிடம் போய் அந்த போஸ்டை நீக்க சொல்வதில் எந்த பயனும் இல்லை.
அல்லது
2) வேண்டும் என்றே வெறுப்பை பரப்புவதற்காக அவர் இப்படி பொய்யாய் பரப்புகிறார்
இதில் எந்த குணம் மோசமானது? என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கோபமாக கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications