பி.எம்.கேர்ஸ் நிதி.. வெளிப்படைத்தன்மையே இல்லை.. வெளுத்துவாங்கிய பிடிஆர்.. கையோடு சொன்ன அறிவிப்பு
சென்னை: "பி.எம். கேர்ஸ் நிதிக்காக எவ்வளவு பணம் வந்திருக்கிறது, எதற்காக செலவழிக்கப்படுகிறது என்ற வெளிப்படைத் தன்மை கிடையாது. ஆனால், தமிழ்நாடு அரசின் பொது நிவாரண நிதியில் வெளிப்படைத் தன்மை உண்டு" என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.. சென்னை தலைமைச்செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இணையதளத்தை இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை வெளிப்படையாக அறிவிக்க இணையதளம். இதன்மூலம் எளிதாக நிவாரண நிதியை செலுத்துவதுடன் செலவு குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

வெளிப்படைத்தன்மை
மே 6க்கு முன் வந்த நிதியை தனிக் கணக்காகவும், மே 7க்கு பின் வந்த நிதியை தனிக் கணக்காகவும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.எம்-கேர்ஸ் நிதியில் எந்த வெளிப்படைத்தன்மையும் கிடையாது. முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 2 மாதங்களில் சுமார் ரூ.472 கோடி வந்துள்ளது.

வெள்ளை அறிக்கை
அதிமுக ஆட்சியில் 14 மாதங்களில் பொது நிவாரண நிதிக்கு ரூ.400 கோடிதான் வந்துள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில்
இன்றைய பேட்டியில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியை ஒப்பிட்டு பி.எம்-கேர்ஸ் நிதி குறித்து பேசி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசை தாக்கி உள்ளார். முன்னதாக ஜிஎஸ்டி கவுன்சிலில் நேரம் ஒதுக்கவில்லை என்றும் நிதியை தமிழகத்திற்கு தரவில்லை என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில மாதம் முன்பு தாக்கியிருந்தார்.

வருகிறது வெள்ளை அறிக்கை
இதற்கிடையே அதிமுகவிற்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கையை விரைவாக வெளியிட பிடிஆர் திட்டமிட்டு வருகிறார். வெள்ளை அறிக்கை வெளியானால் அதிமுக அரசு வாங்கிய கடன்கள் மற்றும் கடந்த ஆட்சியில் ஏற்பட்ட இழப்புகள் வெளியாகும் என்பதால் பரபரப்பு நிலவுகிறது. பட்ஜெட் அனேகமாக அடுத்த இரண்டு வாரங்களில் ஏதேனும் ஒரு நாள் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக வெள்ளை அறிக்கை வெளியாக வேண்டும் என்பதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதியாக உள்ளார்.












Click it and Unblock the Notifications