19 சட்டங்கள்! இது எப்படி நியாயம்? சட்டசபையில் ஆளுநரை சுட்டிக்காட்டி தகித்த பிடிஆர்.. பரபரப்பு பேச்சு
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு இன்று பதில் அளித்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆளுநர் மீதான தனது விமர்சனங்களை அடுக்கினார்.
Recommended Video
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கடந்த 3 நாட்களாக துறை ரீதியான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான கேள்விகளுக்கும், விவாதங்களுக்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.
அதில் பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட்டது எப்படி, 2014க்கு பின் தமிழ்நாட்டின் நிதி நிலை குறைந்து, வருமானம் அதிகரித்தது எப்படி என்று விளக்கம் அளித்தார்.

பிடிஆர் உரை
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது உரையில், தமிழ்நாடு நிதியை பொறுத்தவரை எங்களுக்கு சில சவால்கள் உள்ளன. சில கடுமையாக பிரச்சனைகள் உள்ளன. ஜிஎஸ்டி வந்த பின் தமிழ்நாட்டின் நிதியை சரி செய்வது கடினம் ஆகியுள்ளது. எங்கள் கையில் விலங்கு போட்டது போல் கஷ்டப்பட்டு வருகிறோம். ஒன்றிய அரசு செஸ் சப் சார்ஜை அதிகரித்துள்ளனர். அங்கிருந்து வரும் பணம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படியே கொடுக்கப்படும் நிதியும் அவர்களின் திட்டங்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள்.

நிதி நெருக்கடி
இதனால் கடுமையான கஷ்டம் நிலவி வருகிறது. அடுத்தடுத்து நிதி குழுக்கள் 14, 15 ஆகியவை நிதி ஒதுக்கீடு தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டே வருகிறது. இருக்கட்டும்.. இருந்தாலும் நமக்கு இருக்கும் தலையாய பிரச்சனை நிதி இல்லை. நாம் பணக்கார மாநிலம். நமக்கு கொடுத்தால் கொடுக்கட்டும். இல்லையென்றால் நாம் சமாளித்துக்கொள்வோம்.

பணக்கார மாநிலம்
நம்மிடம் முதலீடு செய்ய வெளிநாட்டினர் ஆர்வம் காட்டுகிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் நமக்கு எப்படியும் நிதி வந்துவிடும். ஆனால் இதற்கு மேல் பல்வேறு கடினமான பிரச்சனைகள் 2 நமக்கு உள்ளது. முதல் பிரச்சனை.. நாம் எப்போதெல்லாம் சட்டம் கொண்டு வருகிறோமோ, மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாம் எப்போதெல்லாம் முடிவுகளை எடுக்கிறோமோ, மக்கள் தேர்வு செய்த கொள்கைக்கு ஏற்றபடி எப்போதெல்லாம் நாம் சட்டங்களை ஏற்றுகிறோமோ அப்போதெல்லாம் அதை ஆளுநர் ஏற்பதில்லை.

முடங்கி கிடக்கும் சட்டங்கள்
மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாம் நிறைவேற்றிய சட்டங்கள் ஆளுனரிடமோ அல்லது குடியரசுத் தலைவரிடமோ முடங்கி உள்ளது. இங்கு பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் கையெழுத்து போடாமல் முடங்கி உள்ளது. இன்று வரை 19 நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஏற்காத காரணத்தால் முடங்கி உள்ளது. இது எப்படி ஜனநாயகம். இது நியாயம் ஆகும். அவங்க எதையும் சரியாக செய்வது இல்லை.

நல்லது செய்தால் தடுக்கிறார்கள்
நாம் எதையாவது சரியாக செய்தால் அதையும் தடுக்கிறார்கள். சட்டத்தை இயற்ற முடியாது என்றால் ஏன் சட்ட மன்றம். இரண்டாவது விஷயம், நான் கடந்த 10 மாதங்களில் சுமார் 3000 கோப்புகளை ஆராய்ந்து இருப்பேன். அதில் தெளிவாக தெரிகிறது. சட்ட துறையின் கடமை என்ன, ஆட்சி துறையின் கடமை என்ன என்று தெளிவாக உள்ளது. ஆனால் இதற்கான வேறுபாடு அப்படியே அழிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் கோர்ட்டுக்கு ஏறி இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.

அதிகாரிகள் பணிகள்
அதிகாரிகள் சரியாக இதனால் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் அரசு பணிகளை செய்வார்களா? கோர்ட்டுக்கு ஏறி இறங்கிக்கொண்டு இருப்பார்கள்? இதற்கான மாற்றங்களை நாம் செய்ய வேண்டும். அப்போதுதான் இன்னும் ஆக்கபூர்வமாக, வேகமாக திறனுடன் ஆட்சியை மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.












Click it and Unblock the Notifications