"ஜெயக்குமார் அண்ணா".. உங்கள் "அம்மாவின்" கருத்துக்கு எதிராக எப்படி நடக்க முடிந்தது?.. பிடிஆர்
சென்னை: ஜிஎஸ்டி கவுன்சிலில் நான் கலந்து கொள்ளாததற்கு என்னை விமர்சிக்கும் அண்ணன் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் அவர்களே நான் கேட்கும் இரு கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள் என தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் 45 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. நீண்ட மாதங்களுக்கு பிறகு மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது என்பதால் எதிர்பார்ப்பு எழுந்தது.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காணொலியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் பல கேள்விகளை கேட்டு பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்திருந்தார். அந்த நேரத்தில் பிடிஆர்தான் டாக் ஆப் தி டவுனாக மாறினார்.

காணொலி காட்சி
காணொலியிலேயே இந்த பிடிபிடித்த பிடிஆர் நேரடியாக ஜிஎஸ்டி கவுன்சிலில் கலந்து கொண்டால் என்ன மோதல்கள் விவாதங்கள் ஏற்படுமோ என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பழனிவேல் தியாகராஜன் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக நிதித் துறை செயலாளர் கலந்து கொண்டு பிடிஆரின் அறிக்கையை மட்டும் சமர்ப்பித்தார். இதை பாஜகவினர் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

பிடிஆர் பழனிவேல்
இதையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்த நிலையிலும் அவர் கொளுந்தியாளின் மகள் பூப்புனித நீராட்டு விழாவுக்கு சென்றுவிட்டார், வளைகாப்புக்கு சென்றுவிட்டார் என கேலி பேசி வந்தனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பிடிஆரை விமர்சித்தார். ஜெயக்குமார் தனது ட்விட்டர் பதிவில் தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. மக்கள், வணிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 30 க்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு கூட்டத்தில் கூட நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை.

ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்
நிதியமைச்சர் தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம். தம்பி பிடிஆர் கவனத்தில் கொள் என ட்வீட்டில் தெரிவித்திருந்தார். இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஒன்றிய நிதியமைச்சர் & கவுன்சலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான் அனுப்பிய 14பக்க அறிக்கையை பகிர்வதற்கு முன் சில கயவர்களின் GST கவுன்சிலின் விதிகள் பற்றிய அறியாமையை வெளிக்கொணர காத்திருந்தேன். முன்னாள் அமைச்சர் போன்ற பெரிய மீன் சிக்குமென நினைக்கவில்லை. மேலும் வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம் என்றார்.

ஜிஎஸ்டி கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை
மேலும் இன்னொரு ட்வீட்டில் பிடிஆர் கூறுகையில் அடுத்த வேடிக்கைக்கு முன்னோட்டமாக டி ஜெயக்குமாருக்கு இரு கேள்விகள். GST வேண்டாம் என்கிற "அம்மா"வின் வெளிப்படையான நிலைப்பாட்டிற்கு எதிராக ஏன் செயல்பட்டீர்கள்? GST சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு (April2017) முந்தைய மிக முக்கியமான 16/03/2017 GST கவுன்சில் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிடிஆருக்கும் ஜெயக்குமாருக்கும்
பிடிஆருக்கும் ஜெயக்குமாருக்குமான கருத்து மோதல் இன்னமும் முடிந்த பாடில்லை. மீண்டும் தனது ட்விட்டரில் பிடிஆர், 500 பக்கங்களுக்கு மேற்பட்ட அறிக்கையை படித்த பின்னர் நான் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு சமர்ப்பித்த அறிக்கை இதோ. தற்போது மீண்டும் அண்ணன் ஜெயக்குமாருக்கு இரு கேள்விகளை கேட்கிறேன்.
1. இது வரை ஜிஎஸ்டி கவுன்சிலின் எத்தனை அறிக்கைகளை நீங்கள் படித்துள்ளீர்கள்.
2. 30 ஜிஎஸ்டி கூட்டங்களில் கலந்து கொண்டதாக சொல்கிறீர்களே தமிழகம் சார்பில் சமர்ப்பித்த அறிக்கைகளில் ஒரு வார்த்தையாவது நீங்கள் எழுதியதுண்டா? இல்லை, வணிக வரித் துறை தாக்கல் செய்த அறிக்கைகளையாவது நீங்கள் படித்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications