பொருள் வரும் வழிகளை இயற்றலும் சேர்த்தலும் காத்தலுமே வல்லவன் அரசு.. திருக்குறளை கூறிய பிடிஆர்!
சென்னை: 6 மாதத்திற்கு மட்டுமே திருத்திய பட்ஜெட் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது உரையில் தெரிவித்துள்ளார். மேலும் வல்லவன் அரசு என்பது என்ன என்பதை திருக்குறளை மேற்கோள்காட்டியும் அவர் பேசினார்.
இன்றைய தினம் 2021- 2022 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக தாக்கல் செய்தார்.

முன்னதாக தங்களை பேசவிடுமாறு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதிக்கவில்லை. இதையடுத்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பட்ஜெட் தாக்கல் செய்யுமாறு சபாநாயகர் அனுமதித்தார்.
இதையடுத்து திருக்குறளை மேற்கோள் காட்டி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை தொடங்கினார். அவர் கூறுகையில்
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன் என்பது இதன் பொருளாகும்.
இதையடுத்து பிடிஆர் பழனிவேல் பேசுகையில் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டதை வெள்ளை அறிக்கை வெளிப்படுத்தியது. பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி விதிப்பு கூட்டாட்சியை நீர்த்து போக செய்கிறது. பெட்ரோல் டீசல் மீது மத்திய அரசுக்கான வரி அதிகரிப்பு- மாநிலப் பகிர்வுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் மேல்வரிகள் குறிப்பிட்ட நோக்கத்துக்காக முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என சிஏஜி குற்றச்சாட்டியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வரி விதிப்பில் மத்திய அரசால் கூட்டாட்சி மனப்பான்மையை நீர்த்துப்போகும் அளவுக்கு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசின் பயனாளர்கள் தொடர்பான தரவுகளை ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பொதுசேவைகளில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும். அனைத்து தணிக்கை துறைகளும் நிதித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு ஒருங்கிணைப்படும்.
ஆண்டுதோறும் ஜூன்3-ல் ரூ10 லட்சத்துடன் செம்மொழி விருது வழங்கப்படுகிறது. கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியம் அமைக்கப்படும். தொல்லியல் ஆய்வுக்கு ரூ 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
Recommended Video
கடந்த அதிமுக அரசு தமிழகத்தை கடனில் மூழ்கடித்ததால் மேற்கண்ட திருக்குறளை அவர் மேற்கோள்காட்டினார். கடன் வாங்குவது பெரிதல்ல, அந்த கடனை வைத்து வருவாயை எப்படி ஈட்ட வேண்டும், வரும் வருவாயை எப்படி காக்க வேண்டும் என்பதை புரிந்து செயல்படும் அரசே வல்லவன் அரசு என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications