நண்பியே நண்பியே.. அப்பாடா சேஃபா இருக்காங்க.. விரைவில் "டூட்டிக்கு" வந்துடுவாங்க.. பிடிஆர் ஹேப்பி!
சென்னை: கோட்டை வாசலில் விபத்தில் காலிழந்த ஒரு நாயை நண்பனாக பாவித்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார்.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த மாதம் முதல் பெரிதும் பேசப்பட்டு வருகிறார். தனது செயல்திறனாலும் துடுக்கான பேச்சாலும் அனைவரையும் அசர வைப்பவர்.
இவருக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர் தனது வீட்டில் 5 நாய்களை வளர்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையர் தினத்தன்று பிடிஆர் ஒரு பதிவு போட்டியிருந்தார்.

இரு மகன்கள்
அதில் 5 நாய்களையும் அவரது இரு மகன்கள், மனைவி, அவர், அவரது தாய் ஆகியோர் மடியில் வைத்துக் கொண்டனர். பின்னர் பிடிஆர் கூறுகையில் கடந்த 2019ஆம் ஆண்டு தந்தையர் தினத்தையடுத்து அரிய வகை மகிழ்ச்சி- எனது 7 குழந்தைகளும் ஒரே நேரத்தில் என பதிவிட்டிருந்தார்.

கோட்டை அலுவலகத்தில் நாய்
இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி கோட்டை அலுவலகத்திலிருந்து வெளியே வந்த போது ஒரு நாய் போலீஸாருடன் நண்பனாக விளையாடி கொண்டிருந்தது. ஆனால் ஒரு கால் இல்லாத நிலையில் இருந்தது. இதையடுத்து பிடிஆர் அந்த போலீஸ்காரரிடம் விசாரித்ததில் அந்த நாய் கார் விபத்தில் சிக்கி கால் உடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நாய்க்கு பிரியாணி
உடனே அந்த நாய்க்கு பிரியாணி வாங்கிக் கொடுத்த பிடிஆர், அதை புகைப்படம் எடுத்து எனது புதிய நண்பி என தெரிவித்திருந்தார். மேலும் மறுநாள் அந்த நாயை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

மருத்துவமனையில் நாய்
சொன்னது போலவே அந்த நாயை மருத்துவமனையில் சேர்த்தார் பிடிஆர். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் அந்த பெண் நாய் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கிறது. விரைவில் நன்றாக நடக்கும். என்னுடன் அலுவலகத்திற்கு வழக்கமான பணிகளை மேற்கொள்ளும். உதவிய அனைவருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications