புதுச்சேரி தேர்தல்.. முதல்வர் ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு.. முடிவுக்கு வருமா தொகுதி பங்கீடு?
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் தொகுதிப் பங்கீட்டில் முடிவு எட்டப்படாத சூழலில், முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சந்திப்பு நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையில் புதுச்சேரி திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகனும் பங்கேற்றுள்ளார். நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கவுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் லட்சிய ஜனநாயகக் கட்சியும் இணைந்திருக்கிறது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும் பாஜக 10 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையே நிறைவு பெறவில்லை. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரின் பேச்சுவார்த்தையில் திமுகவுக்கு அதிருப்தி எழுந்தது. அதேபோல் திமுகவை விட குறைந்த வாக்கு சதவிகிதம் வைத்துள்ள காங்கிரஸ் கட்சி தலைமை வாங்குவதிலும் திமுகவுக்கு ஏற்பு இல்லை.
இதனால் திமுக அதிக தொகுதிகளில் போட்டியிடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனிடையே திமுக தரப்பில் 30 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டு, சில தொகுதிகளில் வேட்புமனு தாக்கலும் நிறைவு பெற்றது. இதனிடையே நாளையுடன் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேரம் நிறைவு பெறவுள்ளது.
இப்படியான சூழலிலும் திமுக - காங்கிரஸ் இடையில் தொகுதி பங்கீட்டில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேரடியாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகனும் உடனிருந்திருக்கிறார். இதனால் விரைவில் திமுக - காங்கிரஸ் இடையில் தொகுதி பங்கீடு நிறைவடையும் என்று பார்க்கப்படுகிறது.
முன்னதாக தமிழ்நாட்டிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்த போது, திடீரென ப.சிதம்பரம் நேரில் வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் கிரிஷ் சோடங்கர் டெல்லியில் இருந்து அனுப்பப்பட்டு தொகுதி பங்கீடு சுமூகமாக நிறைவு பெற்றது. தற்போது புதுச்சேரியிலும் திமுக - காங்கிரஸ் இடையில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால், ப.சிதம்பரம் தலையிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications