கொரோனாவால் பாதிக்கப்பட்ட... புதுவை முதல்வர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை அறிக்கை
சென்னை: கொரோனா தொற்று காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மே 7 முதல்வராகப் பதவியேற்றார். இருப்பினும், அவர் கடந்த இரண்டு நாட்களாகவே சோர்வாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
கொரோனா லாக்டவுன் : தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பிய 2 லட்சம் பேர்
இதையடுத்து நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து அவர் சென்னையிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எம்ஜிஎம் மருத்துவனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை வல்லுநர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவரது உடலில் ஆக்சிஜன் அளவு சீராக உள்ளது. அவரது உடல்நிலையும் சீராக உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் என் ஆர் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.