தீர்ப்பையே மாற்றிப்போட்ட 43வது விதி.. பின்னணி சொன்ன புகழேந்தி.. ‘ஈபிஎஸ் வந்தா நானே சொல்லித்தரேன்’!
சென்னை : அதிமுக உட்கட்சி சட்ட விதி 43ன் படியே, நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பிக்கிறது. ஆனால், அந்த விதியே எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியவில்லை எனச் சாடியிருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி.
Recommended Video
எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார் நீதிபதி.
இந்தத் தீர்ப்புக்குப் பின்னணியில், அதிமுக சட்ட விதி 43 முக்கியப் பங்காற்றியுள்ளது. ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததற்குக் காரணம் இந்த விதிதான் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

படித்தாவது பார்த்தீர்களா ஈபிஎஸ்?
இதுபற்றி பேசியுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, "43வது சட்ட விதியானது 5 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளரையும், இணை ஒருங்கிணைப்பாளரையும் மாற்ற முடியாது என்கிறது. அதை வைத்துத்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு அதுவே தெரியவில்லையே.. பொதுக்குழுவே இதை நீக்கிவிடலாம் என்றால் எதற்கு சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தீர்கள்? அதை ஏன் இப்போது மறுக்கிறீர்கள்? நீங்கள் கொண்டு வந்த தீர்மானத்தை படித்தாவது பார்த்தீர்களா?

விதிகளை சொல்லித் தர தயார்
சட்ட விதிகளை தவறாக புரிந்து கொண்டுள்ளதால் தான் அஇஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டது என்று தவறாக கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமியை அழைத்து நேருக்கு நேர் விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட விதிகளை சொல்லிக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

2021 டிசம்பரில்
கடந்த 2021 டிசம்பரில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவருக்கும் உச்சபட்ச அதிகாரம் அதிகரிக்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பான விதியில் பொதுக்குழு திருத்தம் கொண்டு வர இயலாது. அதனை மீறித்தான், பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கித் தீர்மானம் கொண்டு வந்தது எடப்பாடி பழனிசாமி தரப்பு என நீதிமன்றத்திலும் எடுத்து வைத்தது ஓபிஎஸ் தரப்பு.

கட்சி விதி 43
அதாவது, கட்சியின் சட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்தது ஆகும் என்ற சட்ட விதி எண் 43, சட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்தது என்பதோடு இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கட்சி ஒருங்கிணைப்பாளர், கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல எனத் திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications