தேசிய மலரா கனகாம்பரம், காலிஃபிளவரை வைங்க.. முதலில் தாமரையை ஒழிக்கணும்.. சீறி எழுந்த சீமான்!
சென்னை: பாஜக கட்சியின் சின்னத்தை மாற்றுங்கள். இல்லையென்றால், தேசிய மலரை மாற்றிவிடுங்கள். ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், காலிஃபிளவரை கூட வையுங்கள் என்று கூறியுள்ளார் சீமான்.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களில் 'கரும்பு விவசாயி’ சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில், இந்த லோக்சபா தேர்தலிலும் அதே சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டு வந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் கர்நாடகவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இதையடுத்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க மறுத்துவிட்டது தேர்தல் ஆணையம்.

மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருக்கும்போது எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை உரிமை கோர முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்றும் டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தைக் குறைக்க சதி செய்கிறார்கள் என்றும், நாம் தமிழர் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்றும், பாஜக தலைமையின் அறிவுறுத்தலின்படி தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியுள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
சீமான் பேசுகையில், "இந்த சதிக்குப் பின்னால் இங்கிருக்கும் பாஜக தலைமை இருப்பது எங்களுக்குத் தெரியும். கர்நாடகாவில் 71 ஓட்டு வாங்கும் கட்சிக்கு எங்கள் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதில் பாஜக தலைவர் பி.எல்.சந்தோஷுக்கு தொடர்பு இல்லையா? மகாராஷ்டிரா, பீகாரில் எந்தக் கட்சிக்கும் கொடுக்காத சின்னத்தை இங்கிருந்து அரை கி.மீ-ல் இருக்கும் கர்நாடகாவில் லெட்டர் பேட் கட்சிக்கு ஏன் கொடுத்தீர்கள்?
பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்கனும்.. தேர்தல் முடிந்ததும் கேஸ் போடுவேன்.. சீமான் ஆவேசம்
முதலில் பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் வழக்கு போடுவேன். எனக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். பள்ளிக்கூடத்தில் இருந்து தேசிய மலர் தாமரை என்று சொல்லிக் கொடுத்துவிட்டு, தேர்தலில் நிற்கும் கட்சிக்கு எப்படி அதை சின்னமாக கொடுத்தீர்கள்?
நான் மயில் சின்னம் கேட்டபோது அது தேசிய பறவை என்று சொன்னீர்கள், தேசிய மலரை எப்படி பாஜகவுக்கு கொடுத்தீர்கள்? ஒன்று பாஜக கட்சியின் சின்னத்தை மாற்றுங்கள். இல்லையென்றால், தாமரை பாஜக சின்னமாக இருக்கட்டும், தேசிய மலரை மாற்றிவிடுங்கள். ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், காலிஃபிளவரை கூட வையுங்கள்” என்று ஆவேசமாகப் பேசினார் சீமான்.












Click it and Unblock the Notifications