இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்பதால், பெரிய கட்சிகள் மட்டுமல்லாமல், சிறிய கட்சிகளும் கூட்டணி அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அந்த வகையில், டாக்டர்.கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியை அதிமுக - பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
குறிப்பாக பாஜகவின் நயினார் நாகேந்திரன் , புதிய தமிழகம் கட்சியை தங்களது கூட்டணியில் இணைக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ண்சாமி தனது கோரிக்கைகளை தெளிவாக முன்வைத்ததாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கு கீழ் சமரசம் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதோடு, 2028ஆம் ஆண்டு மாநிலங்களவை இடம் வழங்குவது குறித்து எழுத்துப்பூர்வமான உறுதி அளித்தால், தொகுதி எண்ணிக்கையை குறைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த கோரிக்கைகள் கூட்டணிக்குள் உடனடி ஒப்பந்தமாக மாறவில்லை. காரணம், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மிகவும் கறாரான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு தொகுதிகளுக்கு மேல் வழங்க முடியாது என்றும், மாநிலங்களவை சீட் பற்றிய பேச்சே இல்லை என்றும் அதிமுக தரப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இதனால், புதிய தமிழகம் - அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது "தொங்கல்" நிலையில் உள்ளது.
தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் போது கூட இந்த விவகாரம் முடிவுக்கு வராதது, அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மற்றொரு பக்கம், திமுக தரப்பும் ஆரம்ப கட்டத்தில் புதிய தமிழகம் கட்சியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டணி அமைப்பு ஏற்கனவே நிரம்பி விட்டது என்ற காரணத்தால், அந்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், புதிய தமிழகம் கட்சிக்கு மற்ற விருப்பங்கள் குறைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இந்த சூழலில், "இறுதியில் அவர்கள் நம்மிடமே வருவார்கள்" என்ற நம்பிக்கையை நயினார் நாகேந்திரனுக்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், இதுவரை உறுதி செய்யப்பட்ட முடிவு எதுவும் வெளியாகாததால், நயினாருக்கு அழுத்தம் அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications