எண்ணம் சரியில்லை; ஜெய்பீம் படத்தை தடை செய்க; வன்னியர் அமைப்புகளுக்கு ஆதரவாக கிருஷ்ணசாமி..!
சென்னை: ஜெய்பீம் திரைப்படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
ஜாதி மோதல் மட்டுமல்லாமல் மதம் மற்றும் மொழி ரீதியான மோதலை தூண்டும் வகையில் ஜெய்பீம் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
தணிக்கை குழு இது போன்ற படங்களுக்கு எதன் அடிப்படையில் அனுமதி கொடுத்தது என டாக்டர் கிருஷ்ணசாமி சீறியிருக்கிறார்.
துபாயில் நடந்த தூய்மைப் பணி முகாம் தமிழக இளைஞர் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டு
ஜெய்பீம்
ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிராக வன்னியர் சமுதாய அமைப்புகள் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ஜெய்பீம் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டிய ஒரு படம் என்றும் தேவையற்ற காட்சிகளை புகுத்தி ஜாதி, மதம், மொழி, மற்றும் இன ரீதியான மோதல்களை தூண்டிவிட முயன்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
கேலி கிண்டல்
ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனின் பின்னணியில் அக்னிக்கலசம் காட்சிப்படுத்தப்பட்டது தவறு என்றும் உண்மைச் சம்பவத்தில் வரும் கிறிஸ்துவர் பெயருக்கு பதில் இன்னொரு மதத்தை சேர்ந்த ஒருவரின் பெயரை சூட்டியதும் ஏற்கத்தக்கதல்ல எனவும் கிருஷ்ணசாமி தெரிவித்திருக்கிறார். படத்தில் பிராமணர் தோற்றத்தில் ஒரு வழக்கறிஞரை காட்டி அவர் சிவ சிவா என்பதை கிண்டலும் கேலியும் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது என ஜெய்பீம் படக்குழுவுக்கு அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தணிக்கை குழு
இந்த நாட்டில் தணிக்கை குழு என்ற அமைப்பு எதற்காக இருக்கிறது என்றே தெரியவில்லை என்றும் எப்படி ஜெய்பீம் படத்துக்கு அனுமதி கொடுத்தார்கள் எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி கொதித்தெழுந்து இருக்கிறார். ராஜாகண்ணு விவகாரத்தில் வழக்கறிஞர் சந்துரு என்பவர் ஒரு பார்ட் தான் என்றும் மெயின் யாரோ அவர்களை ஏன் முன்னிலைப்படுத்தி இருக்கலாமே என அடுக்கடுக்கான கேள்விகளை ஜெய்பீம் படக்குழுவுக்கு முன் வைத்திருக்கிறார்.
கொம்பன்
இதனிடையே நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த கொம்பன் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதில் பல இடங்களில் காட்சிகளை மாற்ற வைத்தவர் கிருஷ்ணசாமி என்பது குறிப்பிடத்தக்கது. வன்னியர் சமுதாய அமைப்பினருக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குரல் கொடுத்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.