புழல் சிறையில் கைதிகளுக்கான கேண்டீனை மூடவில்லை.. சிறை நிர்வாகம் ஐகோர்ட்டில் தகவல்!
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேண்டீன் மூடப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதி பக்ரூதின் என்பவர், புழல் சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேண்டீன் திடீரென கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டதாகவும், அதனை திறக்க உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.சத்தியநாராயண பிரசாத், வி.லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, கைதிகளுக்கான கேண்டீன் மூடப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே கேண்டீனை மீண்டும் திறக்கக்கோரி மனு அளித்ததாகவும் கூறினார். மேலும், மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கேண்டீனை திறக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், புழல் சிறையில் கைதிகளுக்கான கேண்டீன் மூடப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இருப்பினும் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும் உறுதி அளித்தார். இதனையடுத்து, சிறை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications