தமிழகத்தில் காலாண்டு, பருவத் தேர்வுகள் தொடங்கியது! 1 முதல் 12ஆம் வகுப்புக்கு இன்று முதல் தொடக்கம்!
சென்னை: தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பருவத் தேர்வுகள் மற்றும் காலாண்டுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது.
தமிழகத்தில் ஒரே மாதிரி பொது காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தேர்வுக்கான வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால், நடப்பாண்டில் பொது காலாண்டுத் தேர்வுகள் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை திடீரென அறிவித்தது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், வெவ்வேறு தேதிகளில் பள்ளிகளில் காலாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தது.

காலாண்டு தேர்வுகள்
பள்ளி அளவில் தேர்வுக்கான வினாத்தாள்களைத் தயாரித்து, தேர்வை நடத்த வேண்டும் என்றும், தேர்வுக்கான தேதிகளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், காலாண்டு தேர்வுகளை வரும் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தேர்வுகள் தொடக்கம்
அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்குகிறது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தொகுத்தறியும் மதிப்பீட்டு தேர்வு என்ற முறையில் பருவத் தேர்வு நடத்தப்படுகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் இன்றுமுதல் நடத்தப்படுகிறது. பாடவாரியாக தனித்தனியே காலாண்டுத் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

காலாண்டு விடுமுறை
ஏற்கெனவே நடப்பு ஆண்டுக்கான காலாண்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 9-ம் தேதி வரையும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 5-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு
தற்போது காலாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தேர்வுகள் முடிந்த பின்னர், மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை முடிந்த பின்னர், ஒன்று முதல் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, அக்டோபர் மாதம் 10-ம் தேதி, பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படும். இதேபோல், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிந்த பின்னர், அக்டோபர் 6-ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications