2018ல் விஜயகாந்த் கடைசியாக என்னை பார்த்து கேட்ட "அந்த" கேள்வி.. நொறுங்கிவிட்டேன்.. ராதாரவி கண்ணீர்
சென்னை: என் நண்பன் விஜயகாந்த் நம்மை விட்டு பிரிய போகிறார் என்பதை 2018 ஆம் ஆண்டிலேயே நான் கணிக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது என நடிகர் ராதாரவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
புரட்சிக் கலைஞர், கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வெளிநாடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் டிசம்பர் 26 ஆம் தேதி வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாக கடந்த மாதம் 28ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு சளி இருந்த நிலையில் சளி மாதிரி எடுத்து சோதனை செய்ததில் அவருக்கு நிமோனியா இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டார்.
இதை அறிந்த தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள், கேப்டனால் பயனடைந்தவர்கள், பயனடையாதவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழகம் முழுவதிலிருந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டனர். இதனால் தலைநகர் சென்னைக்கு மூச்சுமுட்டும் அளவுக்கு கூட்டம் இருந்தது.
இந்த நிலையில் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் இறுதி சடங்கு செய்ய ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது லட்சோப லட்ச மக்கள் திரண்டனர். நவீன கர்ணனுக்கு மேம்பாலங்கள், வீட்டு மாடி, அலுவலக மாடிகள், சாலைகள் என கிடைக்கும் இடங்களில் எல்லாம் மக்கள் நின்று அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
விஜயகாந்தின் இறப்பால் அவருடைய நண்பர் ராதாரவி, தியாகு உள்ளிட்டோர் கண் கலங்கினர். இதுகுறித்து ராதாரவி சன் நியூஸ் சானலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான், விஜிம்மா (விஜயகாந்த்), எஸ்.எஸ்.சந்திரன், வாகை சந்திரசேகர், பாண்டியன், தியாகு ஆகியோர் உயிருக்கு உயிரான நண்பர்கள். எங்களுக்கெல்லாம் விஜிம்மாதான் ஹீரோ.
கடந்த 2018ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்டேன். இதனால் எனக்கு ஓட்டு போடுமாறு கேட்பதற்காக விஜிம்மாவின் திருமண மண்டபத்திற்கு சென்றேன். அங்கு என்னை பார்த்ததும் நன்றாக பேசினார். என்னிடம் அண்ணி எப்படி இருக்காங்க டா என கேட்டார்.
எல்லாம் செய்துவிட்டு திடீரென பக்கத்தில் இருந்த உதவியாளரிடம் இவர் யார் என என்னை பார்த்து கேட்டார். உடனே என் மனம் முடிவு செய்துவிட்டது. ஒரு நண்பரை நாம் இழக்க போகிறோம் என! உடனே விஜிம்மா நீ ஓட்டு போடலாம் வரவேண்டாம் என சொல்லிவிட்டேன். அதாவது சிங்கம் மாதிரி அவரை பார்த்துவிட்டு இந்த நிலையில் அவரை பார்க்க நான் விரும்பவில்லை.
இதையடுத்து அவர் டிசம்பர் 26ஆம் தேதி மருத்துவனையில் சேர்த்ததுமே என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். விஜிம்மா நம்மை விட்டு போக போகிறார் என! 2018இல்தான் அவரை நான் கடைசியாக பார்த்தது. அதன் பிறகு அவருடைய மனைவியிடம் அனுமதி கேட்டுத்தான் போக வேண்டும் என்றார்கள். அதனால் நான் ஒதுங்கிவிட்டேன்.
பொதுக் குழுவில் அவரை அழைத்து வந்து உட்கார வைத்து கஷ்டப்படுத்தியதை பார்த்ததும் எனக்கு மனம் வருந்தியது. இத்தனை ஆண்டுகளாக பார்க்காத ஏக்கத்தில் தீவுத்திடலில் என் நண்பனை பார்த்ததுமே இப்பயாவது பார்த்தோமே என இருந்தது. ஆனால் என்னை அழைத்து பேட்டி கேட்டவுடன்தான் நான் கலங்கிவிட்டேன். விஜிம்மாவை நேரில் பார்த்தால் என்னை விட்டு ஏன்டா போனே என கேட்பேன் என ராதாரவி கண்கலங்கி பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications