ரஜினி அறிக்கை மீது சிலரது விமர்சனம்.. மன்னிக்கவும் மறக்கவும் முடியவில்லை.. ராகவா லாரன்ஸ் வேதனை
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடமாட்டேன் என அறிவித்ததை அடுத்து சிலரது விமர்சனங்களை என்னால் மன்னிக்கவும் மறக்கவும் முடியவில்லை என நடிகர் ராகவா லாரன்ஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக காத்திருந்து விட்டு திடீரென நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போவதில்லை என்று அறிவித்தவுடன் ரசிகர்கள் மன வேதனை அடைந்துவிட்டார்கள். இதையடுத்து வா தலைவா வா என ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் போராட்டத்தை ரசிகர்கள் வள்ளுவர் கோட்டத்தில் முன்னெடுத்தனர்.
இதற்கு ரஜினி காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டு தன்னால் அரசியலுக்கு வர இயலாது என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துவிட்டார். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என எதிர்பார்த்த ரசிகர்களை போல் நடிகர் ராகவா லாரன்ஸும் எதிர்பார்த்து தற்போது மனவேதனையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தனிப்பட்ட பதிவு
அதில் அவர் கூறுகையில் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் வணக்கம்! இன்று நான் ஒரு முக்கியமான அறிக்கையை அழுத்தமாகச் சொல்ல நினைக்கிறேன். இனிமேல், எனது அனைத்து பதிவுகளும் அறிக்கைகளும் எனது தனிப்பட்ட கருத்துகளாகவே இருக்கும். அதில், எனது குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்புபடுத்துவதாக இருக்காது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நல்லதோ கெட்டதோ என்னுடன் மட்டுமே இருக்க வேண்டும். அது ரஜினிகாந்தை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என நான் நினைக்கிறேன்.

சொல்லால் அடித்தால்
தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். கல்லால் அடித்தால் ஆறிவிடும். ஆனால் சொல்லால் அடிச்சா காயம் ஆறாது என்பார்கள். குறிப்பிட்ட சில குழுவினர் ரொம்பவே அடித்துவிட்டார்கள். நானே மன்னிக்க மறக்க நினைத்தாலும் சில வார்த்தைகளை மறக்க இயலவில்லை. யார் மறந்தாலும் அவற்றை நான் மறக்கவே மாட்டேன். காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்.

போராட்டம்
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு எனது மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு என்னை நிறைய பேர் வற்புறுத்தினார்கள். இயக்குநர் சாய் ரமணி வாயிலாக நிறைய வாய்ஸ் நோட்டை நான் கேட்டேன். இன்றளவும் நிறைய பேர் நான் தலைவரிடம் பேசி அவருடைய முடிவை மாற்றிக் கொள்ள வற்புறுத்துகிறார்கள். அதனாலேயே இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன்.

உடல்நிலைதான் காரணம்
தலைவர் ரஜினிகாந்தின் முடிவால் நீங்கள் அனைவரும் கொண்ட வேதனையையே நானும் கொண்டுள்ளேன். தலைவர் அரசியலுக்கு வராததற்கு வேறேதும் காரணம் சொல்லியிருந்தால் நான் நிச்சயம் அவரிடம் பேசி முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுகோள் விடுத்திருப்பேன். ஆனால், அவரோ உடல்நிலையைக் காரணமாக கூறிவிட்டாரே, என்ன செய்வது?

பிரார்த்தனை செய்வோம்
ஒரு வேளை இப்போது நாம் அவரை வற்புறுத்திவிட்டு அதனால் அவரும் மனம் மாறி பின்னர் அவரின் உடல்நிலைக்கு ஏதாவது நேர்ந்தால், வாழ்நாள் முழுவதும் நாம் குற்ற உணர்வோடு இருக்க வேண்டும். அரசியலுக்கு வராவிட்டாலும் அவர் என்றுமே எனது குரு தான். அவருடன் நெருங்கிப் பேசுவதால் எனக்கு அவரின் உடல்நிலை பற்றி நன்றாகத் தெரியும். இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவருடைய உடல் நலனுக்கும் உள்ள அமைதிக்கும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவர் என்றும் நமது பிரார்த்தனையில் இருப்பார். குருவே சரணம் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications