தமிழகத்தில் ராகுல் காந்தியை.. பிரச்சாரம் செய்யவிடக் கூடாது... பாஜக பரபரப்பு புகார்.. பின்னணி என்ன?
சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பரப்புரைகளை தொடங்கிவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா, ஜே பி நட்டா, ராஜ்கநாத் சிங் என பாஜகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல காங்கிரஸ் சார்பிலும் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களிலேயே இரண்டு முறை தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கோவை, கன்னியாகுமரி எனக் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு உள்ள இடங்களைக் குறிவைத்து அவர் பிரசாரம் செய்து வருகிறார்.
தடைவிதிக்க வேண்டும்
இந்நிலையில், தமிழகத்தில் ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் ராகுல் காந்தி பிரசாரத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் இது குறித்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் பாஜக புகார் அளித்துள்ளது.
பாஜக புகார்
இது தொடர்பான புகாரை பாஜகவின் பொதுச்செயலாளர் கே.டி ராகவன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அளித்தார். பாஜகவின் புகார் கடிதம் பற்றி விசாரணை செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தாக அதன் பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கே.டி ராகவன் தெரிவித்தார்.
என்ன செய்தார் ராகுல்
கடந்த மார்ச் ஒன்றாம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டம் முலகுமூடு கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு நிகழ்வாக அவர் அங்குள்ள பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய ராகுல் காந்தி, இந்தியாவுக்கு இப்போது மற்றொரு சுதந்திரப் போராட்டம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார். மேலும், நாட்டு மக்களிடையே கோபமும் பயமும் அதிகரித்து வருவதாகவும் இதை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்றும் பேசினார்.
தேச துரோகம்
ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் அரசியல் ரீதியாக இருந்ததாகவும் அவை தேர்தல் ரீதியாக மாணவர்களைத் தூண்டும் விதத்தில் அமைந்ததாகவும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. அவர் தேசத் துரோகம் உள்ளிட்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் இரண்டு பிரிவுகள் மீறியுள்ளதால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக தனது புகாரில் கூறியுள்ளது.
காங்கிரஸ் பதில்
பாஜகவின் இந்தப் புகார் குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், "தமிழ்நாட்டில் ராகுல் காந்தி மீது மக்கள் அதிக அன்பு காட்டுகிறார்கள். இங்கு ராகுல் காந்திக்கு இருக்கும் புகழைக் கண்டு பொறாமையால் பாஜக இப்படி நடந்துகொண்டுள்ளது. இந்தப் புகாரை தேர்தல் ஆணையம் நிராகரிக்கும் என நம்புகிறோம்" என்றார்