இன்று தொடங்கும் காங்கிரஸ் பாரத் ஜோடோ யாத்திரை.. ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை
சென்னை: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் இன்று பாரத் ஜோடோ யாத்திரை தொடங்க உள்ளது. யாத்திரையில் பங்கேற்பதற்காக நேற்று இரவு ராகுல் காந்தி சென்னை வந்தார்.
யாத்திரையை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் புறப்பட்டார் ராகுல் காந்தி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்த ராகுல் காந்தி செல்கிறார்.
'இந்திய ஒற்றுமை பயணம்' எனும் பெயரில் இந்த நீண்ட யாத்திரை நடத்தப்பட உள்ளது. குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் ராகுல் காந்தி தனது அப்பாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
காங்கிரஸ் தலைவர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

பயண திட்டம்
இன்று பிற்பகல் விமானம் மூலம் ராகுல் காந்தி சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் கன்னியாகுமரி செல்கிறார். மாலை கன்னியாகுமரியில் காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல் காந்தி சந்திக்க உள்ளார். அதன்பின் காந்தி சிலையில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரை தொடங்க உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார். சரியாக மாலை 5 மணிக்கு இந்த யாத்திரை தொடங்க உள்ளது.

60 கேரவன்கள்
ஒவ்வொரு மாநிலத்திற்குள் செல்லும் போதும் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியுடன் உடன் செல்வார்கள். கன்னியாகுமரியில் தொடங்கினாலும் யாத்திரை தமிழ்நாடு வழியாக செல்லாமல், கேரளா வழியாக செல்ல உள்ளது. இந்த நடைப்பயணத்தில் ஒவ்வொரு 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராகுல் காந்தியுடன் 50 ஆயிரம் பேர் உடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரம்மாண்டமாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் தொடங்கவுள்ள நிலையில், அவருக்காக சகல வசதிகளுடன் கூடிய 60 கேரவன்கள் வந்துள்ளன.

உப்பு சத்தியாகிரக போராட்டம்
கேரவன்களில் ஏசியுடன் கூடிய படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கான பிரச்சனை நிலவி வரும் நிலையில் அக்கட்சி பாரத் ஜோடா யாத்திரை என்ற மிகப்பெரிய யாத்திரையை நாடு முழுக்க நடத்த உள்ளது. 3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. இவ்வளவு தூரத்தையும் ராகுல் காந்தி நடந்தே செல்வார். 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை மீட்டு எடுக்கும் விதமாக இந்த யாத்திரை நடைபெற உள்ளது.

யார் பங்கேற்பார்கள்
கர்நாடகா, ஆந்திர பிரதேசம் தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக காஷ்மீருக்கு இந்த யாத்திரை செல்ல உள்ளது. காங்கிரஸ் மட்டுமின்றி காங்கிரஸ் சாராத பல அறிவுஜீவிகள், இடதுசாரிகள், எழுத்தாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதை காங்கிரஸ் கட்சி இரண்டாவது உப்பு சத்தியாகிரக போராட்டமாக பார்க்கிறது. தினமும் 20- 30 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி இதற்காக நடைபயணம் செல்ல உள்ளார்.












Click it and Unblock the Notifications