ஆனா.. விதை நான் போட்டது..! காலி சொம்பு தான் மிச்சம்..உதயநிதி பாணியை கையிலெடுத்த ராகுல் காந்தி! அடடே!
சென்னை: கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் கையில் செங்கலை வைத்து பிரச்சாரம் செய்தது போல தற்போது கர்நாடகாவில் சொம்பை வைத்து பிரச்சாரம் செய்திருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி. ஊழல் செய்த பாஜக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என காலி சொம்பை வைத்து கொடுத்த விளம்பரம் அங்கு பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து, இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு பிரச்சார யுக்திகளை யோசித்து யோசித்து செய்து வருகின்றனர்.

வடை சுடுவது, டீ போட்டுக் கொடுப்பது, இஸ்திரி போடுவது என தங்களால் என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இறங்கி வாக்காளர்களை கவர முயற்சி செய்து வருகின்றனர்
நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 29 பைசா நாணயத்தின் புகைப்படத்தை காட்டி வாக்குத் திரட்டினார் திமுக இளைஞரணி தலைவரும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டில் ஒரு ரூபாயை வரியாக கட்டினால் மத்திய அரசு வெறும் 29 காசுகளை தான் தருகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு ரூபாய் ஜிஎஸ்டி கட்டினால் மூன்று ரூபாயாக திரும்பி கிடைக்கிறது என பிரச்சாரம் மேற்கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின்: இந்த பிரச்சாரம் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய அளவில் கை கொடுத்தது மிகப்பெரிய பொருளாதார விஷயத்தை சாமானிய மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த பிரச்சார யுத்தி இருந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார யுக்தியை பாராட்டினர். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக செங்கலை வைத்து பாஜக அதிமுக கூட்டணியை விமர்சித்தார் உதயநிதி ஸ்டாலின். அதாவது எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு இன்றுவரை கட்டுமானம் தொடங்கப்படாமல் இருக்கும் நிலையில் இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனையென செங்கல்லை எடுத்துக் காட்டினார்.
காலி சொம்பு: உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் அப்போது ஊடங்களில் பேசப்பட்டதோடு, பெரிய அளவில் மக்களிடம் சென்று சேர்ந்தது. தற்போது வரை மீம் டெம்ப்ளேட் ஆகவும் செங்கல் விஷயம் இருக்கிறது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார பாணியை கையில் எடுத்திருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி. கர்நாடகாவில் இன்று நடந்து முடிந்த வாக்கு பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் இதே போன்ற ஒரு பிரச்சார யுக்தியை கையில் எடுத்தது. அது காலி சொம்பு பிரச்சாரம். பாஜக கோடீஸ்வரர்களுக்கு கொட்டிக் கொடுத்தது அதே நேரத்தில் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை காலி சொம்பு மட்டும் தான் மிச்சம் என பாரதிய சொம்பு கட்சி என்ற விளம்பரத்தை பல்வேறு நாளிதழ்களில் கொடுத்தது.
ராகுல் காந்தி: இது தேர்தல் வாக்குப்பதிவின் போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் காங்கிரசின் இந்த செயல் தேர்தல் விதிமுறைகளை மீறியது என கர்நாடக பாஜகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. அதே நேரத்தில் பெரிய அளவில் இணையதளங்களிலும் இந்த விளம்பரமானது பேசுபொருளானது. இதை அடுத்து தனது பிரச்சார பாணியாக இதனை கையில் எடுத்திருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ”கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பாஜக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.. அவர்களுக்கு கிடைத்தது இந்த காலி சொம்பு தான்” என காலி சொம்புடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications