கமல்ஹாசனுடன் கூட்டணி! இருக்கும் வாய்ப்பையும் ராகுல் காந்தி இழப்பார்! சுப்ரமணிய சாமி கிண்டல்!
சென்னை: கமல்ஹாசனை கூட்டு சேர்த்தால் இருக்கின்ற ஒன்றிரண்டு வாய்ப்பையும் ராகுல் காந்தி இழந்துவிடுவார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
மேலும், திமுகவுக்கு கொள்கை என்பதே கிடையாது என்றும் நாட்டை பிரிக்க வேண்டும் என்று பேசுவதே அவர்களுடைய வழக்கம் எனவும் சுப்ரமணிய சுவாமி விமர்சித்தார்.

கருணாநிதிக்கு கடலில் பேனா வைப்பதை பற்றி தாம் கருத்துச் சொல்ல விரும்பவில்லை எனக் கூறிய அவர், தேர்தல் வந்தால் ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என பேசுபவர்கள் திமுகவினர் என விமர்சித்தார்.
கோயில் விவகாரங்களில் அரசு தலையிட்டால், தாம் நிச்சயம் வருவேன் எனத் தெரிவித்த சுப்ரமணிய சாமி, திடீரென திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது தனது கோபத்தை கொட்டினார். வீரமணியிடம் வீரம் கிடையாது ஆனால் Money மட்டும் நிறைய கொட்டி வைத்திருக்கிறார் என விமர்சித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் கருத்துக் கூற மறுத்த அவர் பொது சிவில் சட்டம் பற்றியும் பேசவில்லை. தமிழ்நாட்டில் பாஜக தனித்து நிற்க முன்வர வேண்டும் என்றும் கூட்டணிக்காக யாரையும் காக்கா பிடிக்ககூடாது என அறிவுரை வழங்கிய சுப்ரமணிய சாமி, அண்ணாமலை என்ன செய்கிறார் என்று தனக்கு தெரியாது என்றும் அவர் எதைப் பற்றியும் தன்னிடம் பேசுவதில்லை எனவும் கூறினார்.












Click it and Unblock the Notifications