சென்னை பீச் - வேளச்சேரி பறக்கும் ரயில்.. கிடைச்சது கிரீன் சிக்னல்! டோட்டலாக மாறப்போகும் சேவை
சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையினை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைக்கும் திட்டத்திற்கு ரயில்வே வாரியம் முதற்கட்ட ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதன் மூலம் பறக்கும் ரயில் சேவையின் சொத்து, ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியன தமிழக அரசின் கீழ் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இதனால் இனி கூடுதல் வசதிகள், மேம்பட்ட ரயில் சேவையினை பயணிகள் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் மின்சார ரயில் சேவை பெரும் பங்காற்றி வருகிறது. சென்னையின் போக்குவரத்திற்கு பெரிதும் உதவியாக புறநகர் மின்சார ரயில் சேவை இருந்து வருகிறது. இதுபோக மெட்ரோ ரயில் சேவைகளும் சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. இதுபோக சென்னை கடற்கரை டூ வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை பீச் - வேளச்சேரி பறக்கும் ரயில்
இந்த ரயில் சேவையானது கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. மொத்தம் 19 கீமீ தூரம் உள்ள சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தில், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், இந்திரா நகர், திருவான்மியூர் உள்பட 18 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
புறநகர் பகுதி மக்களை இணைக்கும் வகையில் முக்கிய வழித்தடமாக இது இருந்து வருகிறது. தினந்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த பறக்கும் ரயில் சேவையினை பயன்படுத்தி வருகின்றனர். இதில் தற்போது, வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான 5 கிமீ தூரத்துக்கு விரிவாக்கப் பணிகளும் நடந்து வருகிறது. இந்த பணிகள் எல்லாம் முடிந்து வரும் நவம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
மத்திய அரசுக்கு தொடர் கோரிக்கை
இந்த பறக்கும் ரயில் வழித்தடத்தில், சேவை பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.104 கோடி வரை செலவிடப்பட்டு வருகிறது. ஆனால், இதில் வருவாய் என்று பார்த்தால் ரூ.60 கோடி என்ற அளவில் மட்டுமே கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தில் பொதுமக்களின் தேவைக்கேற்ப வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுவதில்லை என்பது பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
இதற்கிடையே தான் பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இது தொடர்பாக கடந்த மாதம் 16 ஆம் தேதி ரயில்வே அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், சென்னை கடற்கரை டூ வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையினை மெட்ரோ ரெயில் நிர்வாகத்துடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் முதற்கட்ட ஒப்புதலை வழங்கி உள்ளது.
விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இதன்மூலம் பறக்கும் ரயில் சேவையின் சொத்து, ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியன தமிழக அரசின் கீழ் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் தயாரிக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் இனி கூடுதல் வசதிகள், மேம்பட்ட ரயில் சேவையினை பயணிகள் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications