“தமிழ் கத்துக்கோங்க.. ரொம்ப நல்லது” - என்னப்பா பாஜக அமைச்சரே இப்படி சொல்றாரு.. விஷயம் என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில் பெட்டியை பார்வையிட்டார்.
வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் மாதிரிகளை பார்வையிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 12 ஆயிரமாவது ரயில் பெட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ரூ.1,500 கூடுதல் வருவாய்.. ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு சலுகை இல்லை.. அஷ்வினி வைஷ்ணவ் திட்டவட்டம்
சென்னை வந்த மத்திய அமைச்சர்
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று இரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர் இன்று காலையில் பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்படும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் மாதிரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பூர் ஐ.சி.எப் சார்பில் தயாரிக்கப்பட்ட 12 ஆயிரமாவது ரெயில் பெட்டியையும் கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்கு சமர்ப்பித்தார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
பெருமையாக உள்ளது
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திந்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமரின் நோக்கம் இந்திய ரயில்வே துறையை உலகத்தரத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரெயில்கள் உலகத்தரம் வாய்ந்த ரயில் சேவையாக உருவாக்கப்படுவது பெருமையாக உள்ளது நாடு முழுவதும் மக்கள் இந்த பாதையில் பயணிக்க உள்ளனர்.
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை. ரயில்வே துறையை முன்னேற்றத்திற்கு கொண்டு சென்று தரமான ரெயில்கள் மூலமாக நல்ல பயண அனுபவத்தை பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம் எனத் தெரிவித்தார்.
3 மடங்கு அதிகம்
மேலும் தமிழகத்தில் உள்ள சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய 5 ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 30 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.3,865 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 3 மடங்கு அதிகம்.
ரயில் தண்டவாளங்களை யானைகள் கடக்கும்போது விபத்துக்குள்ளாகிறது. யானைகளை கடக்க தரைப்பாலம் அமைக்கப்படும். முதற்கட்டமாக கேரளா, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 18 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனக் கூறியுள்ளார்.
தமிழ் கற்க வேண்டும்
தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் பணியாற்றும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மாநில மொழி கற்க வேண்டும். மாநில மொழி தெரியாமல் இருப்பதால், ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள ரெயில்வே ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைபவ் தெரிவித்துள்ளார்.