கிளாம்பாக்கம் பயணிகள் இதை எதிர்பார்க்கலயே! புறநகர் ரயில்வே ஸ்டேஷன்.. தாமதம் ஆகுதாம்! இதுதான் காரணமா?
சென்னை: கிளாம்பாக்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கும் வகையில், புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்து எப்போது புதிய ரயில் நிலையம் திறக்கப்படும் என்று பயணிகள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில், புறநகர் ரயில்வே நிலையம் அமைக்கும் பணிகள் மேலும் தாமதம் ஆகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை அடுத்துள்ள கிளம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. 88 ஏக்கரில் ரூ.393.71 கோடியில் கட்டி திறக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் இருந்துதான், தென் மாவட்டங்கள் முதற்கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்தே வெளியூருக்கு கிளம்புகின்றன.

கிளாம்பாக்கம்: இந்த பேருந்து நிலையத்தில் துவக்கத்தில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. நகருக்கு வெளியே பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என பயணிகள் ஆதங்கம் தெரிவித்தனர். ஆனால் தற்போது சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எப்போதும் கிளாம்பாக்கத்திற்கு பேருந்து இயக்கப்பட்டு வருவதால் பயணிகளுக்கு கிளாம்பாக்கத்தை சென்றடைவதில் சற்று சிரமம் குறைந்துள்ளது. அதேபோல கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலையம்: அதேவேளையில், புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டால் கிளாம்பாக்கம் வந்து செல்வது இன்னும் எளிதாக இருக்கும் என்பதால் இந்த ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்தில் வண்டலூருக்கு அடுத்தபடியாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.
மேலும் தாமதம் ஆகும்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அமையும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் வருவதற்கு ஆகாய நடைமேடையும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் இன்னும் முடியவில்லை. இதற்கிடையே, ரயில் நிலையத்தின் கீழ் பகுதியில் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளதாம். இதனால், ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் மேலும் தாமதமாக வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.
ரயில்வே அதிகாரி விளக்கம்: இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணியானது நடைபெற்ரு வருகிறது. மூன்று நடைமேடைகள், ரயில் நிலைய மேனேஜர், டிக்கெட் ஆபிஸ், பார்க்கிங் வசதி, நடைமேம்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் ரயில் நிலையம் அமைய உள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராவும் அமைக்கப்பட இருக்கிறது. ஒரு நடைமேடையில் தற்போது பணிகள் முடிவடைய உள்ளது.
தமிழக அரசு அறிவுறுத்தல்: இந்த ரயில் நிலையத்தின் கீழ் பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது. எனவே, அந்த பணிகளும் நடைபெற இருக்கிறது. இந்த பணிகள் காரணமாக ரயில் நிலையம் அமைக்கும் பணி மேலும் தாமதம் ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் இந்த பணிகளை எல்லாம் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.
பயணிகள் ஏமாற்றம்: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் திறக்கப்படும் என பயணிகள் எதிபார்த்த நிலையில் தற்போது பணிகள் முடிவடைய ஆகஸ்ட் மாதம் வரை ஆகலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறியிருக்கும் தகவல் பயணிகளுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications