ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. தெற்கு ரயில்வேயில் கடும் போட்டி!
சென்னை: ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சென்னை உள்பட 29 இடங்களில் போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு தொடங்கியது.
ரயில்வேயில் முதல் முறையாக கடந்த 2007 ஆம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும். 30 சதவீத வாக்குகளை பெறும் சங்கத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும். இந்த சங்கம், ரயில்வே தொழிலாளர்களின் பிரச்சனை தொடர்பாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். 15 சதவீத வாக்குகள் பெறும் சங்கத்துக்கு கூட்டம் நடத்தவும் , செய்தி பலகை வைக்கவும் அனுமதி கிடைக்கும்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு) 43 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகார தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், 2019ல் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறவில்லை.
இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் டிசம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ரயில்வே வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. ரயில்வேயில் பணியாற்றும், சுமார் 12 லட்சம் ஊழியர்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள்.
தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை, எஸ்.ஆர்.எம்.யு எனப்படும் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், டி.ஆர்.இ.யு. எனப்படும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ். எனப்படும் தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. DRKS, RMU ஆகிய சங்கங்களும் களத்தில் உள்ளன. இந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் ரயில்வே ஊழியர்களிடம் வாக்கு சேகரித்து வந்தனர்.
இந்நிலையில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சென்னை உள்பட 29 இடங்களில் போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
சென்னையில் 38 வாக்குச்சாவடிகள் உள்பட தெற்கு ரயில்வேயில் 140 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெற்கு ரயில்வேயில் சுமார் 76 ஆயிரம் தொழிலாளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்கு எண்ணி்க்கை வரும் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications