சென்னையில் மழைக்காலம் - மாலையில் கனமழை காலையில் சாரலோடு விடிந்தது
சென்னையில் மாலையில் காற்றோடு கனமழை கொட்டித்தீர்த்தது. காலையில் சாரல் மழையோடு விடிந்தது.
சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. வானிலை மையம் அறிவித்தது போல நேற்று மாலை மழை பெய்த நிலையில் இன்று காலையிலும் சாரல் மழை பெய்து வருவதால் சென்னையின் பருவநிலையே ஜில்லென்று மாறி விட்டது.
Recommended Video
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் அவ்வப்போது வெப்பசலனத்தினால் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக உள் மாவட்டங்களில் மழை கொட்டி வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

இன்றைய தினம் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் திருவண்ணாமலை, அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று மாலை முதலே பலபகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை முதலே சாரலுடன் விடிந்தது.
சென்னையில் கிண்டி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. வடபழனி, கோடம்பாக்கம், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் அலுவலகம் செல்பவர்கள் நனைந்தபடியே சென்றனர்.
ஜூலை 16ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications