யாஸ் புயல் உருவாகும் முன்பே.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை.. 2வது நாளாக சூறை காற்றுடன் பெய்தது
சென்னை: சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய இந்த கனமழை காரணமாக நகரில் வெப்பம் தணிந்து குளுமையான வானிலை நிலவுகிறது.
Recommended Video
சென்னை, ஆதம்பாக்கம், பூந்தமல்லி, போரூர், அம்பத்தூர், ஆவடி , வளசரவாக்கம், வானகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
பிற்பகல் முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது.
இன்று 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. அடுத்த 4 நாட்களுக்கு எப்படி.. வானிலை மையம் ரிப்போர்ட்
வட உள் மாவட்டங்கள்
சென்னை மட்டுமில்லாமல் , காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்கள் பலவற்றிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மைய வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். வடக்கு அந்தமான், கிழக்கு மத்திய வங்க கடல் பகுதிகளில், இன்று அல்லது நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி அடுத்த 72 மணி நேரத்தில் அது புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள்.
யாஸ் புயல்
கடலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களின் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. அது வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து, 26ம் தேதி மாலையிலோ அல்லது 27ம் தேதி அதிகாலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம்
இந்த புயலால் தமிழகத்துக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா . வெப்பச்சலனம் காரணமாக வெள்ளிக்கிழமையான இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், நேற்று தெரிவித்திருந்தார்.
நல்ல மழை பெய்யும்
புயல் வலுவடைந்த பிறகு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முன்னோட்டம் தான் இன்று சென்னையில் பெய்யும் மழை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.