மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு அடி வெளுக்கப்போகுதாம் மழை.. இதோ மாவட்டங்கள் லிஸ்ட்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 25 மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனவும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது. பருவ மழை தொடங்கியதில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் பருவமழை தொடங்கிய முதல் வாரத்திலேயே கனமழை கொட்டி தீர்த்தது.
வடகிழக்கு பருவமழை! 26 மனித உயிரிழப்புகள்.. 29 கால்நடை உயிரிழப்புகள்! 67 குடிசைகள்.. 66 மரங்கள் சேதம்
வடகிழக்கு பருவமழை
சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதுமே நல்ல மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் மிக கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை வெளுத்து வாங்குகிறது. இந்த நிலையில், தலைநகர் சென்னையில் இன்று மதியம் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது.
25 மாவட்டங்களுக்கு மழை நீடிக்கும்
குறிப்பாக சென்னை எழும்பூர், ஓட்டேரி, பல்லாவரம், குரோம் பேட்டை பெருங்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இதேபோல் தமிழகம் முழுவதும் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 25 மாவட்டங்களுக்கு மழை நீடிக்கும் என்றும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நாளை முதல் 11 ஆம் தேதி
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இதே பகுதிகளில் உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை முதல் 11 ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை
இதன் காரணமாக இன்றும் (நவ.08), நாளையும் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கன முதல் மிக கனமழை
இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 11-ந்தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ஆகிய 15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, இராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
11 மாவட்டங்களில் கனமழை
வரும் 12 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.