சன்டே அதுவுமா 3 மணி நேரத்திற்கு.. 11 மாவட்டங்களில் மழை.. 11இல் உங்க ஊர் இருக்குதானு பாருங்க!
சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது வடகிழக்கு திசையில் நகர்ந்து கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலும் வாட்டி எடுத்து வந்தது.
இதனால் மக்கள் வெளியே தலை காட்ட முடியாமல் தவித்து வந்தனர். வீட்டில் 24 மணி நேரமும் ஃபேனும் ஏசியும் இயங்கியபடியே இருந்தது. எனினும் மே மாதம் சென்னை உள்பட தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து குளிர்ச்சியை கொடுத்தது.

தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையின் முகப்பேர், அண்ணாநகர், ஆவடி, அம்பத்தூர், கோயம்பேடு, வடபழனி, கே கே நகர், ஈக்காட்டுத்தாங்கல், சேப்பாக்கம், தேனாம்பேட்டை, சூளைமேடு, பெரம்பூர், அயப்பாக்கம், திருவேற்காடு, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில்,தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
அது போல் 18.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
20.06.2023 மற்றும் 21.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications