17ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மழை.. ஹீட்+ஈரப்பதம்.. உடல் அசௌகரியம் ஏற்படலாம் - வானிலை மையம் அலெர்ட்!
சென்னை: மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வெப்பநிலை அதிகரிப்பால் அசௌகரியங்கள் ஏற்படலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று (13.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். (14.06.2023 முதல் 17.06.2023 வரை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் வரும் 13ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒரிரு இடங்களில் இயல்பில் இருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்" எனக் கூறப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை இருக்கும்போது, அதிக ஈரப்பதமும் இருந்தால், நம் உடல் வியர்வை அதிகம் வெளியேறாது. இதனால், உடலைக் குளிரச் செய்வது கடினம். வெட் பல்ப் டெம்ப்பரேச்சர் அதிகமானால் உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். இந்த வெட் பல்ப் டெம்பரேச்சர் பாதிப்பு வரும் நாட்களில் அதிகம் இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications