8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை வெளுக்கப்போகுது! ஜூலை 28 வரை ‘சரவெடி’.. வானிலை அலெர்ட்!
சென்னை: அடுத்த சில மணி நேரங்களில் காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 26ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நேற்று மழை பெய்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அண்ணா மேம்பாலம், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்தது.

6 நாட்களுக்கு மழை: இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (ஜூலை 24) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 25) வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடம் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்தார்.
உதகையில் காற்றுடன்கூடிய தொடர் மழை காரணமாக நூறு அடி உயர மரம் விழுந்து மின் சேவை பாதிக்கப்பட்டது. தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications