சென்னையில் டமால், டுமீல்.. விடிய விடிய இடி, மின்னலுடன்.. நள்ளிரவு தாண்டியும் வெளுத்து வாங்கிய மழை
சென்னை: தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், நள்ளிரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நடப்பு ஆண்டு வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் முடிந்த பிறகும் வெப்பம் வாட்டி வதைத்தது. தென்மேற்கு பருவமழை கடந்த 8 ஆம் தேதியே கேரளாவில் தொடங்கியது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தில் வெப்பம் குறையத் தொடங்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெயில் பெரும்பாலான இடங்களில் 100 டிகிரியை தாண்டியது. இரவில் கடுமையான புழுக்கமும் நிலவியது.
இந்த நிலையில், கோடை வெயிலுக்கு விடை கொடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால்,வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிக்றது. சென்னையில் கடந்த 2 நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து இதமான சூழல் நிலவுகிறது. நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால், பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. நேற்று பகல் முழுவதும் மழை விட்டு விட்டு பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
மழையால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது என்று சொல்லும் அளவுக்கு வாகன போக்குவரத்து நெரிசலும் இருந்தது. நகரின் முக்கிய சாலைகளில் தேங்கியிருந்த மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதையே பார்க்க முடிந்தது. சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பலான இடங்களில் தண்ணீர் மழை விட்ட சிறிது நேரத்தில் வழிந்தோடியது.
விட்டு விட்டு மழை பெய்து கொண்டே வந்த நிலையில், இன்றும் நள்ளிரவு தாண்டியும் மழை பெய்தது. இடி மின்னலுடன் கனமழை பெய்தது. புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, கிண்டி, வடபழனி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, வளசரவாக்கம், சாலிகிராமம் என நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தரமணி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.
புறநகர் பகுதிகளிலும் பெருமழை பெய்தது. இப்படி சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி வருகிறது. மழையால் திடீரென சென்னை ஜில்லென்று மாறியதால் வீடுகளில் மக்கள் ஏசியை ஆஃப் செய்து ஓய்வு அளித்தனர். ஃபேன்கள் இல்லாவிட்டால் தூங்கவே முடியாது என்று இருந்தவர்கள் கடந்த இரு தினங்களாக மின் விசிறியே தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது. அந்த அளவிற்கு இதமான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications