இன்னும் முதல்வராகவே பதவியேற்கலை! அதற்குள் "மரியாதைக்குரிய முதல்வர்" என குறிப்பிட்ட ஆளுநர் மாளிகை
சென்னை: முதல்வராகவே விஜய் பதவியேற்காத நிலையில் ஆளுநர் மாளிகையே , "மரியாதைக்குரிய முதல்வர்" என குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய், ஆளுநர் அர்லேகரை சந்தித்த வீடியோவுக்கு கேப்ஷனாக Honourable CM Met Governor என கொடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. இதில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

திமுக: 59 இடங்களுடன் பிரதான எதிர்க்கட்சியானது.
அதிமுக: மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
ஆட்சி அமைக்க உரிமை கோரல்:
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், 108 இடங்களை வென்ற விஜய்க்கு மேலும் 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி (5 இடங்கள்) தனது ஆதரவை தவெக-வுக்கு வழங்கியது. இதர சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை விஜய் திரட்டினார்.
நேற்று மாலை சென்னை பனையூர் அலுவலகத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல் குமார், வெங்கட்ரமணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். விஜய்யின் கோரிக்கையை ஏற்ற ஆளுநர், அவரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்ததோடு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளார்.
பதவியேற்பு விழா ஏற்பாடுகள்
நாளை காலை 11.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமான முறையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஆளுநர் அர்லேகர், விஜய்க்குப் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.
முக்கிய விருந்தினர்கள்:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
அண்டை மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.
சிறப்பம்சங்கள்
பாதுகாப்பு: விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கைச் சுற்றி 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொண்டர்கள் வெள்ளம்: 'தளபதி' முதல்வராகப் பதவியேற்பதைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் சென்னை நோக்கிப் படையெடுத்து வருவதால், நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
புதிய சகாப்தம்: சுமார் 60 ஆண்டுகால திமுக - அதிமுக இருதுருவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புதிய கட்சி ஆட்சிப் பீடத்தில் அமர்வது தமிழக அரசியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பதவியேற்ற கையோடு, தனது அமைச்சரவை பட்டியலையும், மக்களுக்கான முதல் திட்டத்தையும் விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
"மக்களின் மாற்றத்திற்கான தீர்ப்பை, மகத்தான சேவையாக மாற்றுவேன்" என்ற விஜய்யின் முழக்கத்தை நோக்கித் தமிழகம் இப்போது உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் விஜய் , ஆளுநரை சந்தித்தது குறித்து அனுப்பிய வீடியோவில் ஆளுநர் மாளிகை, Honourable CM Met Governor, அதாவது மரியாதைக்குரிய முதல்வர் ஆளுநரை சந்தித்தார் என ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. இன்னும் முதல்வராகவே பதவியேற்காத நிலையில் மரியாதைக்குரிய முதல்வர் என ஆளுநர் மாளிகை குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications