க்ளைமேட் மாறுதே.. டாக்டர் ஐயா ராமதாஸை சொன்னதுமே.. ஆவேசமாக கிளம்பிய ராஜேஸ்வரி பிரியா.. திமுகவை விடலயே
சென்னை: மக்களுக்காக யார் குரல் கொடுத்தாலும் அதனை காது கொடுத்து கேட்க வேண்டியது முதல்வரின் கடமை, அதை விடுத்து அவருக்கு வேறு வேலையில்லை என்று பேசுவது மக்களை பற்றி சற்றும் சிந்திக்காத மனப்பாங்கினையே வெளிபடுத்துகிறது என்று ராஜேஸ்வரியா கூறியிருக்கிறார்.
ஆரம்ப காலங்களில், பாமகவில் இணைந்து செயல்பட்டவர் ராஜேஸ்வரி பிரியா.. அந்த கட்சியின் மாநில நிர்வாகியாகவும் இருந்தவர்.. கடந்த 2019 தேர்தலின்போது, அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததை கண்டித்து, பாமகவில் இருந்து அதிரடியாக விலகினார்.

ஆனால், பாமகவிலிருந்து விலகியதுமே, பாமகவினர் தன்னை விமர்சித்து வீடியோக்களை வெளியிடுவதாக ராஜேஸ்வரி பிரியா செய்தியாளர்களிடம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தொந்தரவு: "இதுவரைக்கும் பாமகவில் 2 வருடம் இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு தொந்தரவும் அப்போ எனக்கு இல்லை. இப்போது வெளியே வந்துவிட்டேன். தொந்தரவு வர ஆரம்பிச்சிருக்கு. அவர்கள் ஜாதி பெண்களுக்கு இப்படி ஒரு துன்புறுத்தல் அங்கே இல்லை. அவங்க ஜாதி நான் இல்லை என்பதால் என்னை இப்படி துன்பப்படுத்தறாங்களோன்னு தெரியல. ஆனா இதுகூட காரணமாக இருக்கலாம்" என்று ஆதங்கத்துடன் கூறியிருந்தார்.
இதற்கு பிறகு "அனைத்து மக்கள் அரசியல் கட்சி" என்ற பெயரில் புதுக்கட்சியை ஆரம்பித்து, பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜேஸ்வரி பிரியா.. இயல்பாகவே சமூக அக்கறை நிறைந்த ராஜேஸ்வரி பிரியா, இளைய சமுதாயத்துக்கு தேவையான கருத்துக்களை விடாமல் எடுத்து சொல்லி வருகிறார்.. பாமகவிலிருந்து விலகியபோதும், பாமகவைவிட, திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
கடும் கண்டனம்: இப்போதும், ஒரு கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.. அதானியுடனான சந்திப்புக் குறித்து டாக்டர் ராமதாஸ் எழுப்பிய கேள்வி பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்று கூறியிருந்தார்.
ராமதாசை கொச்சைப்படுத்தும் வகையில் ஸ்டாலின் பதிலளித்துள்ளது, பாமகவினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு
பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. அந்தவகையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள்: அதில், "மூத்த அரசியல் தலைவராக இன்று செயல்பட்டு வரும் பாமக நிறுவனர் மருத்துவர் திரு ராமதாஸ் அவர்களின் மக்கள் சார்ந்த அறிக்கை என்பது தமிழகத்தில் எப்போதும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.. அரசின் கவனத்திற்கு மக்கள் பிரச்சினைகளை கொண்டு செல்லவே அறிக்கைகள் அனைத்து அரசியல் கட்சிகளாலும் கொடுக்கப்படுகிறது.
அறிக்கை பற்றி முதல்வரிடம் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்ட போது ராமதாசு அவர்களுக்கு வேறு வேலை இல்லை.. அவர் தினம் ஒரு அறிக்கை கொடுத்து கொண்டிருப்பார்.. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.. என்ற அதிகாரத்திமிருடனான பதில் முதல்வரின் சர்வாதிகார போக்கினை வெளிப்படுத்தியுள்ளது.
சிந்திக்காத மனப்பாங்கு: மக்களுக்காக யார் குரல் கொடுத்தாலும் அதனை காது கொடுத்து கேட்க வேண்டியது முதல்வரின் கடமை. அதை விடுத்து அவருக்கு வேறு வேலையில்லை என்று பேசுவது மக்களை பற்றி சற்றும் சிந்திக்காத மனப்பாங்கினையே வெளிபடுத்துகிறது" என்று ராஜேஸ்வரிபிரியா காட்டமாக கூறியிருக்கிறார். பாமகவிலிருந்து விலகியபோதும், டாக்டர் ராமதாஸுக்காக பரிந்து பேசியிருப்பது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications