உண்மையை சொன்னால் இது தான் கதியா...? செய்தியாளர் கொலைக்கு ராஜேஸ்வரி பிரியா கண்டனம்..!
சென்னை: உண்மை செய்தியை வெளியிட்டால் அதற்கு பரிசு கொலையா என அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினரை செய்தியாளர் மோசஸ் நாடிய பின்னரும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருக்க காரணம் என்ன என வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது;
தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. போதைப்பொருள் விற்பனை குறித்து செய்தி வெளியிட்டதால் ஏற்பட்ட படுகொலை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
உண்மை செய்தியை வெளியிட்டால் இதுதான் கதி என்பது நமது நாட்டின் சாபக்கேடு. காவல்துறையிடம் ஏற்கனவே உயிருக்கு ஆபத்து உள்ளது என்று புகார் அளித்தும் அதனைபொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தியது மோசமான செயலாகும் .
சாமானியர்கள் பாதுகாப்புக் கோரினால் அலட்சியப்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். ஆட்சியாளர்களை காப்பாற்ற மட்டும் காவல்துறை நியமிக்கப்படவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையும் நேர்மையும் கொலை செய்யப்படுவது சாதாரணமாகிவிட்டது.