மக்கள் நீதி மய்யத்தில் நான் சேரவில்லை.. ராஜேஸ்வரி பிரியா விளக்கம்
Recommended Video
சென்னை: கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பாமகவில் இருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா தெரிவித்திருக்கிறார்.
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக கூறி வந்த பாமக... திடீரென லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. தமிழகத்தில் பாமகவின் இந்த முடிவு பெரும் விமர்சனங்களை எழுப்பியது.
பாமகவுக்குள்ளே தொண்டர்கள் மத்தியில் 2ம் கட்ட தலைவர்கள் மத்தியிலும் இந்த கூட்டணி பெரும் விவாத பொருளாக மாறியது. பாமகவின் கூட்டணி நடவடிக்கையை கண்டித்து... அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி ப்ரியா கடுமையாக விமர்சித்தார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து, பரபரப்பு அறிக்கையையும் வெளியிட்டார். அவர் தான் வகித்து வந்த பதவியை மட்டுமல்ல, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்தையும் விட்டு விலகினார்.
அவரை பாராட்டி அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கமலஹாசன் ஆகியோர் ராஜேஸ்வரிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தனர். விரைவில் அவர் மக்கள் நீதி மய்யத்தில் இணைவார் என்று கூறப்பட்டது.
அதன்படி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
என்னுடைய இந்த தைரியமான முடிவை பல கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். ஆனால் நான் எந்த கட்சியிலும் சேரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.