மறுபடியும் முதல்ல இருந்து.. தெளிவாக குழப்ப ஆரம்பித்திருக்கும் ரஜினி!
மீண்டும் பேட்டி கொடுத்து அனைவரையும் குழப்பி உள்ளார் ரஜினிகாந்த்.
Recommended Video

சென்னை: இப்போ மறுபடியும் முதல்ல இருந்து தெளிவா குழப்ப ஆரம்பிச்சிருக்கார் ரஜினி!!
பணமதிப்பு இழப்பு நடவடிக்கை தவறானது என்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வை எதிர்த்து குரல் கொடுப்பதாக இருந்தால், அது ஆபத்தான கட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று ரஜினி காந்த் கூறி உள்ளார். இப்போது ரஜினியின் இந்த கருத்துதான் எல்லாரையும் மண்டை காய வைத்துள்ளது.
[எனக்குத் தெரியாதுன்னு சொன்ன ரஜினி... ட்ரென்டாகும் #ரஜினிக்கு _ தெரியாது]

ஆன்மீக அரசியல்
குறிப்பாக பாஜகவினர் இன்னும் ஷாக்கிலிருந்து மீளவில்லை. ஆன்மீக அரசியல் என்று சொன்னபோதே, எல்லாருக்கும் ஓரளவு ரஜினியின் பாதை புரிந்துவிட்டது. இதற்கு காரணம் மோடி, அமித்ஷாவுடனான நெருக்கம்தான் என்று பார்க்கப்பட்டது. கடைசியில் புரிந்தும் புரியாத மாதிரி, விளங்கியும் விளங்காத மாதிரி ஆன்மீக அரசியலுக்கு ஒரு விளக்கம் கொடுத்தார்.

ரசிகர் மன்ற வேலைகள்
அடுத்ததாக, ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி, அதற்கான உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் கூட்டம், நடவடிக்கை என பலகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வளவும் நடந்து கொண்டிருக்கும்போது, "ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது" என்று கூறி விட்டார். அப்பறம் எதுக்கு இவ்வளவு வேலைகளையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மன்ற நிர்வாகிகள் இழுத்து கொண்டு போட்டு செய்தார்கள் என தெரியவில்லை.

ரெடி ரெடி ரெடி
இதற்கு நடுவில் தமிழகத்தின் 3 'தி'-க்கள் அடிக்கடி ரஜினியை சந்தித்து வந்தார்கள். திருமாவளவன், திருநாவுக்கரசர், தினகரன் என மூன்று பேரும் தனித்தனியாக சந்தித்து பேசப்போய் அரசியல் நோக்கர்களிலிருந்து மக்கள் வரை இவர் யாருடன்தான் கூட்டணி வைக்க போகிறார் என்று குழம்பி போனார்கள். இதுவரை கட்சியும் தொடங்கவில்லை. அதுகுறித்து கேள்விகளுக்கெல்லாம் எல்லாம் ரெடி ரெடி என்று மட்டுமே ரெடிமேடான பதிலை முன்வைக்கிறார்.

அரசியல் ஞானம்
தமிழகத்தின் அடிப்படை பிரச்சினைகளையும் கூட அவர் உள் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட யாரையும் தெரியாதே என்று அவர் சொன்ன பதில் தமிழக மக்களை தூக்கி வாரிப் போட வைத்துள்ளது. இந்த அளவுக்கா இவரது அரசியல் ஞானம் இருக்கிறது என்று பலரும் வியந்து பார்க்கின்றனர். ஒரே நாளில் இவரது இமேஜ் சுத்தமாக தரைமட்டமாகியுள்ளது.

இதுவா முதிர்ச்சி
இவரை நம்பி பாஜக எப்படி தேர்தல்களை சந்திக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஏன் தன்னை நம்பியும், தனது பேச்சை நம்பியும் ரஜினியே கூட மக்களை சந்திக்க முடியாது, மிக மிக கடினம். அந்த அளவுக்குத்தான் அவரது தமிழக நிலவர ஞானம் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.. ரஜினியின் முதிர்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்பதை.












Click it and Unblock the Notifications