எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினா நாடே சுடுகாடாகிவிடும்.. ரஜினி பேச்சை நீங்களே மீறலாமா? ரசிகர்களே
சென்னை: எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் தற்போது அவருடைய ரசிகர்களே போராட்டம் நடத்த தொடங்கி ரஜினியின் அறிவுரைகளை ஏற்காதவர்கள் என நிரூபித்துவிட்டனர்.
கடந்த 25 ஆண்டுகளாக ரஜினியை அரசியலுக்கு வா தலைவா, வா தலைவா என அழைத்து அழைத்து ரசிகர்கள் வெறுத்து போய்விட்டார்கள் என்றே சொல்லலாம். 2017-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருகிறேன் என ரஜினி சொன்னவுடன் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆனால் அந்த அறிவிப்பு கிணற்றில் போட்ட கல்லாக இருந்தாலும் சில ரசிகர்கள் மனம் தளராமல் ரஜினியின் கட்சிக் கொடியை பிடிக்க தயாராக இருந்தனர். இந்த நிலையில் டிசம்பர் 3-ஆம் தேதி அவர் அரசியலுக்கு வருவதாக கூறி, கட்சிக்கான இரு பொறுப்பாளர்களையு்ம நியமித்திருந்தார்.
அரசியல்
டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி குறித்து அறிவிப்பதாக கூறிய ரஜினி டிசம்பர் 29-ஆம் தேதியே தான் அரசியலுக்கு வர போவதில்லை என தனது உடல்நிலையை காரணம் காட்டி கூறிவிட்டார். ஆனாலும் ரசிகர்கள் விடாமல் அவரது கையை பிடித்து இழுக்காத குறையாக நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்கள்.
சிறுநீரகம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காலை முதல் மதியம் வரை அறவழி போராட்டம் நடத்தினார்கள். 70 வயதான ஒருவர், அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவருக்கு கொரோனா வந்தால் நிச்சயம் சிறுநீரகத்தை பாதிக்கும் என அறிவுறுத்தப்பட்டவர் ரஜினிகாந்த்.
முக்கியம்
2012-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் சிகிச்சைக்கு போய் மறுபிறவி எடுத்து வந்தார். ரசிகர்களின் பிரார்த்தனையால் மட்டுமே தான் பிழைத்ததாகவும் அவர் அவ்வப்போது கூறி வருகிறார். அப்படிப்பட்ட ஒருவரை உடல்நிலையை விட நீங்கள் அரசியலுக்கு வருவதுதான் முக்கியம் என கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
சுவர்
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அவரது உடல் நலமாக இருந்தால்தான் அவர் திரைப்படங்களிலாவது நடித்து நம்மை மகிழ்விப்பார்? இதுகுறித்து ரசிகர்கள் சிறிதும் யோசனை செய்யாமல் அவரை கட்டாயப்படுத்துகிறார்கள். ரஜினியை அரசியலுக்கு வருமாறு அழைத்து யாராவது ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை பாயும் என ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்தது.
போராட்டம்
ஆனால் இந்த எச்சரிக்கையை யாரும் கேட்கவில்லை. அது போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ரஜினிகாந்த் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என ஆவேசமாக தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட ரஜினியின் ரசிகர்களாக இருந்து கொண்டு போராட்டம் நடத்துவது சரியா.
ஸ்டெர்லைட் போராட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்காக போராட்டம் என்பது அந்த பகுதி மக்களின் உயிர், வாழ்வாதார பிரச்சினை. ஆனால் ரஜினி ரசிகர்கள் போராட்டம் நடத்தியது அப்படிப்பட்ட பிரச்சினைக்காக அல்ல. நவம்பர் 30-ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் தான் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்த ரசிகர்கள் இப்போது திடீர் போராட்டம் நடத்த காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்கொலை
முதலில் பெற்றவர்களையும் ,குடும்பத்தையும் பாருங்கள் என ரஜினி எப்போதும் அறிவுறுத்துவார். ஆனால் அந்த அறிவுரைகளை கேட்காமல் ரஜினியின் அரசியலுக்கு வர போவதில்லை என்ற அறிவிப்பை காரணம் காட்டி தன் குடும்பத்தினரை நட்டாற்றில் விட்டுவிட்டு ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
மாத்திரை
ரஜினிக்கு தற்போது மருந்து மாத்திரை தேவையில்லை. அமைதியும் , பூரண ஓய்வும்தான் தேவை. மருத்துவர்களும் மன உளைச்சல் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என ஐஸ்வர்யாவிடம் அறிவுறுத்தியுள்ளார்கள். இந்த நிலையில் ரஜினியின் மனதை மேலும் மேலும் நோகடிப்பது சரியா என யோசிக்க வேண்டும்.
பலிகடா
என் உயிர் போனாலும் பரவாயில்லை, ஆனால் எனக்காக யாரையும் பலிகடாவாக்கவில்லை என பொது நலம் கருதி பேசிய ரஜினியின் ரசிகர்களா அவர் உடல்நலம் கெட்டாலும் பரவாயில்லை, அவர் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பது? ரசிகர்களே முதலில் ரஜினியின் அறிவுறுத்தல்களை நீங்களே மதிக்காவிட்டால் அவரது வார்த்தைக்கு என என்ன மரியாதை உள்ளது?