73 வயதிலும் இளைஞராக இருக்கும் ரஜினி.. இமயமலையில் சித்தர்கள் தரும் மூலிகை? சீக்ரெட் சொன்ன நண்பர்
சென்னை: சூப்பர் ஸ்டார் 73 வயதிலும் 23 வயது இளைஞர் போல் இருக்க காரணம் இமயமலையில் சித்தர்கள் தரும் மூலிகைதான் காரணம் என அவருடைய நண்பர் ராஜ் பகதூர் சீக்ரெட்டை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ரஜினிகாந்த், பேருந்து நடத்துநராக இருந்தார். அவருடன் ஓட்டுநராக ராஜ் பகதூர் என்பவர் இருந்தார். இதனால் இன்று வரை ரஜினியும் ராஜ் பகதூரும் நண்பர்கள். ரஜினி எப்போதுமே பழசை மறக்காதவர்.

எனவே அவர் எத்தனை உயரத்திற்கு போனாலும் தான் சாதாரண கன்டக்டராக இருந்த போது யாருடன் எல்லாம் நட்பு பாராட்டினாரோ இன்று வரை அவர் நட்பாகவே இருந்து வருகிறார். ஒரு பக்கம் முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நண்பர்களாக இருந்தாலும் மறுபக்கம் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெங்களூர் நபர்களும் ரஜினிக்கு நண்பர்கள்தான்.
இந்த வகையில் ரஜினி எல்லா மேடைகளிலும் கூறும் நண்பர் ராஜ் பகதூர். இந்த ஜெயிலர் பட விழாவில் கூட ராஜ் பகதூர் குறித்து பேசியிருந்தார். ராஜ் பகதூர்தான் முதலில் நாடகங்களில் நடித்திருந்தார். ஒரு முறை கடோட்கஜன் கதாபாத்திரத்திற்கு ரஜினியை அழைத்தார்களாம். அவரும் சூப்பராக நடித்தாராம். இதையடுத்துதான் அவரை சென்னை பிலிம் சிட்டியில் சென்று நடிப்பு பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு ராஜ்பகதூர் அனுப்பி வைத்தார் என ரஜினி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜெயிலர் பட வெளியீட்டின் போது சில ரகசியங்களை ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ரஜினிகாந்த் அதிக அளவில் தியானம் செய்வதன் மூலம் தான் இத்தகைய ஆற்றலை பெறுகிறார். அடிக்கடி அவர் இமயமலைக்கு சென்று அங்கு பல முனிவர்களை சந்திப்பார். அங்குள்ள முனிவர்களும் சித்தர்களும் ரஜினி இளமையாக இருக்க மருத்துவ தாவரங்களின வேர்களை கொடுப்பார்கள்.
அந்த வேரை ஒரு முறை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு சக்தி கிடைக்கும். மேலும் உடலுக்கு அது உற்சாகத்தை தரும். அதனால்தான் 73 வயதாகும் ரஜினிகாந்த் இன்று 23 வயது இளைஞரை போல் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்து வருகிறார். ஒவ்வொரு ரஜினி படமும் திருவிழாதான். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ் பகதூரை போனில் அழைத்த ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு கருத்து கூறுமாறு கேட்டார்.
மற்றவர்கள் படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று மட்டும்தான் சொல்லுவார்கள். ஆனால் நான் உண்மையான கருத்துகளை கூறுவேன். நான் 53 ஆண்டுகளாக அவருடைய நண்பராக இருக்கிறேன். அதனால் உள்ளதை உள்ளபடியே கூறுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை. ஒவ்வொரு முறையும் ரஜினிகாந்த் பட வெளியீட்டின் போது இமயமலைக்கு சென்று பூஜை நிகழ்த்துவார்.
உடல்நலம் பாதிப்பால் கடந்த 4 ஆண்டுகளாக ரஜினிகாந்தால் இமயலைக்கு செல்ல முடியவில்லை. இந்த முறை அவர் சென்றிருக்கிறார். என்னையும் அழைத்தார். ஆனால் வடமாநிலங்களில் அதிக மழை பெய்து வருவதால் அவரையே போக வேண்டாம் என அறிவுறுத்தினேன். ஆனால் அவர் எந்த முடிவு செய்தாரோ அதை செய்யும் பழக்கம் அவருக்கு இருக்கிறது.
ரஜினிகாந்தி சூப்பர் ஹிட் படம் பாட்ஷா எனக்கு மிகவும் பிடிக்கும். அதே போன்றதொரு நடிப்பை தனது 73 வயதில் ஜெயிலரில் வெளிப்படுத்தியிருக்கிறார். பாட்ஷா போல் ஜெயிலரும் வரலாற்றை படைக்கும். நான் டிரைவராகவும் அவர் கன்டக்டராகவும் பேருந்தில் பணியாற்றினோம். நான் தியேட்டருக்கு சென்றாலே ரஜினி ரசிகர்கள் என்னை கொண்டாடுகிறார்கள். ஏதோ ரஜினியே வந்துவிட்டது போல் நினைக்கிறார்கள். இது ரஜினிக்கும் தெரியும். ஜாக்கிரதையாக இருக்குமாறு அவர் பல முறை என்னை எச்சரித்துள்ளார் என ராஜ் பகதூர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications